(எம்.ஏ.றமீஸ்)
நாடு தழுவிய ரீதியில் உள்ள கடற்கரைச் சூழலினைச் சுத்தப்படுத்தி மக்களுக்கு உகந்த சுற்றாடலை கட்டியெழுப்பும் பொருட்டு கடற்கரையினைச் சுத்தப்படுத்தி தூய்மைப் படுத்தும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக கடற்கரை சூழலை சுத்தப்படுத்தும் நிகழ்வு அக்கரைப்பற்றில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராணுவத்தின் 241வது படைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வேலைத் திட்டத்தில் சுமார் 400 இற்கும் அதிகமான இராணுவத்தினர் கலந்து கொண்டு கடற்கரைத் தூய்மைப் படுத்தும் வேலைத் திட்டத்தினை மேற்கொண்டனர்.

இராணுவத்தின் 241 ஆம் படைப் பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் டபள்யூ.பி.ஜே.கே.விமலரத்ன தலைமையில் இடம்பெற்ற இவ்வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தம்பிலுவில் முதல் பெரிய நீலாவணைப் பிரதேசம் வரையான சுமார் 35 கிலோமீற்றர் கொண்ட கடற்கரையோரப் பிரதேசம் முற்று முழுதாக சுத்தம் செய்யப்பட்டது.

இவ்வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வின்போது இராணுவத்தின் 241 வது படைப்பிரிவின் மேஜர் அனுர புண்ணியசிறி, மேஜர் யு.எல்.சி.ஜயசேன உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்விராணுவப் பிரிவின் கீழுள்ள அன்னமலை, கல்முனை மற்றும் நீத்தை ஆகிய பிரதேச இராணுவப் பிரிவு முகாம்களின் படையினருடன், அக்கரைப்பற்றில் அமைந்துள்ள 241 ஆம் படைப்பிரிவில் சேவையாற்றும் படையினரும் இணைந்து இவ்வேலைத் திட்டத்தினை மேற்கொண்டனர்.

இதன்போது கடற்கரைப் பிரதேத்தில் உள்ள பல்வேறு கழிவுப் பொருட்கள் ஒன்று சேர்க்கப்பட்டு, பிளாஸ்றிக் பொருட்டகள், உக்காத கழிவுப் பொருட்கள், உக்கக்கூடிய கழிவுப் பொருட்கள், நீண்ட காலம் சுற்றாடலை மாசுபடுத்தும் கழிவுப் பொருட்கள் போன்றன தரம் பிரிக்கப்பட்டு அவை திண்மக் கழிவு முகாமைத்துவம் செய்யப்படும் வகையில் உள்ளுராட்சி மன்றங்களினால் நிர்வகிக்கப்படும் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையங்களில் கொட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வேலைத் திட்டத்தின் பின்னர் கடற்கரைப் பிரதேசம் தூய்மைப் படுத்தப்பட்டு, அழவு படுத்தப்பட்டு காட்சி தருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours