- நூருல் ஹுதா உமர் -
தற்போதைய வெள்ள அனர்த்த அபாய நிலைமையை கருத்தில் கொண்டும் பிரதேசத்தில் நிலவிய துர்நாற்றத்தை கவனத்தில் கொண்டும் மக்களால் முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களுக்கு செவிசாய்த்து கல்முனை மாநகர சபையும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து சாய்ந்தமருது தோணாவை சுத்திகரிப்பு செய்யும் வேலைத்திட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவருகிறது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்றுவரும் இவ்வேலைத் திட்டத்தின் மூலம் இத்தோணாவில் தேங்கியுள்ள சல்பீனியாக்களும் பொது மக்களினால் வீசப்பட்டு நிரம்பியுள்ள திண்மக்கழிவுகளும் இயந்திரங்களைக்கொண்டு தோண்டி அள்ளப்பட்டுவருகிறது .
இத்தோனா ஆழமாக்கப்படுவதன் மூலம் வெள்ள நீர் யாவும் இத்தோணாவினால் முழுமையாக உள்வாங்கப்பட்டு, கடலுக்கு செலுத்தப்படும். இதனால் சாய்ந்தமருது பிரதேசம் மாத்திரமல்லாமல் மாளிகைக்காடு, காரைதீவு போன்ற பிரதேசங்களும் பாரிய வெள்ளப்பெருக்கு அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்புப்பெறுகிறது.
இவ்வாறு தோணா சுத்திகரிப்பு செய்யப்பட காரணமாக அமைந்த கல்முனை மாநகரசபை முதல்வர், ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், இப்பிரச்சினைக்காக குரல்கொடுத்த ஊடகங்களுக்கு அப்பிரதேச மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.


Post A Comment:
0 comments so far,add yours