(காரைதீவு  நிருபர் சகா)
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பசியுடனிருக்கும் மக்களுக்கு முதலில் சமைத்த உணவை வழங்குங்கள். பின்பு உலருணவை வழங்குங்கள்.


இவ்வாறு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்படி கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவியும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிறியாணி விஜேவிக்ரம தலைமையில்  (10) செவ்வாய்க்கிழமை அம்பாறை கச்சேரி ஏ.ஜ.விக்ரம கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றகூட்டத்தில் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீரதிசாநாயக்க முன்னாள் அமைச்சர் தயாகமகே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கோடீஸ்வரன் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் எம்.எம்.நசீர் ஆகியோரும் திணைக்களத்தலைவர்கள் உள்ளுராட்சிமன்றத்தலைவர்கள் உள்ளிட்டபிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இறைபிரார்த்தனையும் சுனாமியால் பாதிக்கப்பட்டேர்ருக்கும்இரண்டுநிமிட மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

முதலில் தற்போது காணப்படுகின்ற மழைவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பாக சுமார் ஒரு மணிநேரம் கலந்துரையாடப்பட்டது.

கலந்துகொண்டோரில் 70வீதமானவர்கள் தமிழ்பேசுவோராக இருந்தும் கூட்டம் சிங்களத்தில் நடாத்தப்பட்டது. சிலர் ஆங்கிலத்தில் பேசினர். தவிசாளர்களான கே.ஜெயசிறில்(காரைதீவு) த.கலையரசன்(நாவிதன்வெளி) ஆகியோர் மட்டும் தமிழில் பேசினர்.
எதுஎப்படியிருப்பினும் அங்கு தமிழ்மொழிபெயர்ப்பு இருக்கவில்லையென்பதை பலரும் முணுமுணுத்ததை அவதானிக்ககூடியதாகவிருந்தது.


மாவட்ட அனர்த்த முகாமைத்துவதிணைக்கள உதவிப்பணிப்பாளர் எம்.எ.சி.எம்.றியாஸ் கூறுகையில்:

அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 7147 குடும்பங்களைச்சேர்ந்த 25027பேர் பாதிக்கப்பட்டுள்தாக தரவுகள் சொல்கின்றன. 4வீடுகள் முற்றாகவும் 197வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்தாக இறுதிக்கட்ட தரவுகள் கூறுகின்றன.

சம்மாந்துறையில் ஒருவர் மரணித்திருக்கிறார். அட்டாளைச்சேனையில் ஒரு படகு சேதமாகியுள்ளது. 10முகத்துவாரங்கள் வெட்டப்பட்டு கடலில் வெள்ளநீரைஅனுப்பப்பட்டுள்ளது.


எமக்கு 1.5மில்லியன் ருபா அரசினால் வழங்கப்பட்டுள்ளது. 
சமைத்த உணவு வழங்குவதற்க அரசஅதிபர் பிரதேசசெயலாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார். உலருணவு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் நடைபெறுபெறுகின்றன.


ஒருவாரத்திற்கு ஒரு நபர்கொண்ட குடும்பத்திற்கு 900ருபாவும் இரு அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்திற்கு 1100  3 பேர் கொண்ட குடும்பத்திற்கு 1300ருபாவும் 4 பேரும் அதற்கு கூடுதலாக அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்திற்கு 1600  வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.



சமைத்த உணவை வழங்க நாள் ஒன்றிற்கு 300  வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. என்றார்.



கரையோரப்பிரதேசத்தில் காணப்படும் வெள்ளத்தை வழிந்தோடச்செய்வதற்கு அவசர நடவடிக்கை எடுக்கவேண்டுமென  பைசால் காசிம் கேட்டுக்ககொண்டார். அதேபோல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக விதைநெல்வழங்கப்படவேண்டும் பாதிப்புக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும் என்றெல்லாம் கலந்துரையாடப்பட்டது.



இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியிருப்பவர்களுக்கு மட்டுமே  சமைத்தஉணவை  வழங்குதல்  என்ற சுற்றுநிருபத்திற்கு பதிலாக புதிய சுற்றுநிருபம் வழங்கப்படவேண்டும்.அப்போதுதான் விரைந்து உற்றார்உறவினர்வீடுகளில் தங்கியிருப்போருக்கும் வாழ்வாதாரத்தை இழந்தோருக்கும் நிவாரணத்தை உடனடியாக வழங்கமுடியுமென அரசஅதிபர் பண்டாரநாயக்க கருத்துரைத்தார்.



கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர் குண. சுகுணன் கூறுகையில் வெள்ளம் அதிகரிக்க தொற்றுநோயின் தாக்கமும் அதிகரிக்கிறது. டெங்கின் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. ஒரு வகைவைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. எதனையும் முகம்கொடுக்க நாம் தயாராகவுள்ளோம். என்றார்.



கூட்டம் மு.பகல் 10.15 தொடங்கி 2 மணிவரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மழையும் வெளியில் தொடர்ந்துபொழிந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours