
கொரோனா நோய்த் தொற்று காரணமாக தொடர் ஊரடங்குச் சட்டத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அன்றாடம் கூலித் தொழில் புரியும் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்களுக்கான நிவாரணப் பணியின் முதல் கட்டமாக கோரளைப்பற்று பிரதேச செயலகப்பிரிவின் கல்மடு கிராமத்தில் 100 குடும்பங்களுக்கு நிவாரணம் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜாவின் சிபாரிசின் பேரில் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சுமார் ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுக அமைப்பின் தலைவர் எஸ். மாமாங்கராஜா மற்றும் அதன் நிருவாக சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த முதல்கட்டப் பணிகள் இடம்பெற்றன. கல்மடு கிராமத்தில் வழங்கப்பட்ட இவ்வுலர் உணவுப் பொதிகளுக்கான நிதியுதவியினை வைத்திய கலாநிதி வாசுகி ஹரிகரன் மற்றும் கொழும்பைச் சேர்ந்த திரு. பிரபாகரன் ஆகியோர் வழங்கி வைத்திருந்நதனர்.
புணர்வாழ்வு அதிகார சபையின் தலைவரும் முன்னாள் வடகிழக்கு மாகாண கட்டளைத் தளபதியுமான தர்சன ஹெட்டியாராச்சியின் நெறிப்படுத்தலில் நடைமுறைப்படுத்தப்படும் இச்செயற்திட்டத்திற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தமிழ் பொறியிலாளர் அமைப்பு மற்றும் வேறு பல நிறுவனங்களும் இத்தகைய மக்களுக்கு உதவிகளை வழங்க மட்டக்களப்பு சிவில் சமுக அமைப்பினூடாக உதவ முன்வந்துள்ளதுடன், அரசாங்க அதிபரின் சிபாரிசுடன் மாவட்டத்தின் அவ்வப் பிரதேச செயலாளர்களினூடாக இவ்வுதவிகள் வழங்கப்படும் என அமைப்பின் தலைவர் எஸ். மாமாங்கராஜா தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours