காரைதீவு  நிருபர் சகா


லண்டன் முருகபக்தர் கதிர்காமர் மாணிக்கவாசகர் 100 உலருணவுப்பொதிகளை நேற்று அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய வளத்தாப்பிட்டிக் கிராமத்தில்; வழங்கிவைத்தார்.

யாழ்ப்பாணம் இணுவிலைச்சேர்ந்த தற்சமயம் லண்டனில்வாழும் முருகபக்தர் கதிர்காமர் மாணிக்கவாசகர் பிரதிவருடமும் வேல்சாமி தலைமையிலான யாழ்.கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டுவருபவராவார்.

அவர் தனது மனிதநேய உதவியாக தானாகவே முன்வந்து இதனை கதிர்காம பாதயாத்திரைச்சங்கத்தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரிடம் வழங்கிவைத்தார். 

இவர் ஏலவே வடக்கு கிழக்குப்பகுதியில் மிகவும் பின்தங்கிய ஆலயங்களுக்கு வெண்கல விக்கிரங்களை சுமார் 80லட்சருபா பெறுமதியில் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

சம்மாந்துறை பிரதேசசெயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவின் அனுமதியுடன் கிராமசேவை உத்தியோகத்தர் எஸ்.ரவி முன்னிலையில் இப்பொதிகள் நேற்று மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

வளத்தாப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் ஆலய செயலாளர் காந்தனின் வேண்டுகோளின்பேரில் இவை அங்கு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதேவேளை நாவிதன்வெளிப்பிரிவிலுள்ள வறுமையின் உச்சத்தில்வாழும் கோபாலபுரம் வீட்டுத்திட்ட மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.

வளத்தாப்பிட்டி கிராமத்தில் இரவுவேளைகளில் தொடர்ச்சியாக காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் விளைவித்துவருவதும் நேற்றுஅங்கு  குடும்பஸ்தர் ஒருவரை யானை தாக்கி சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours