கிராமசேவையாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராமசேவையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில்,  கிராமசேவையாளர் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளனர். 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவின் கல்லாறு 2 கிராமத்தில் சேவையாற்றும் கிராம சேவையாளரின் சேவைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நபரொருபர் செயற்பட்டிருக்கின்றார். இச்செயற்பாடு மிகவும் மோசமானதாகும். 

அவ்வாறு செயற்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை எமது சங்கம் மேற்கொண்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். 

கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையிலும், கிராமசேவை உத்தியோகத்தர்கள், தம்மை அர்ப்பணித்து 24மணி நேரமும் வேலை செய்கின்றனர்.  இவ்வாறு கடமைபுரியும், கிராம சேவையாளர்களின் சேவைக்கு ஒத்துழைப்பு வழங்காது, இடையூறு விளைவிப்பதென்பது வன்மையாக கண்டிக்கதக்கது. 

தமது வேலைகளுக்கும் அப்பால் ஏனைய அரச திணைக்களங்கள் செய்ய வேண்டிய வேலையையும், தற்போதைய அசாதாரண சூழ்நிலையில்,  கிராம சேவையாளர்கள் மக்களுக்காக அடிமட்டத்தில் இருந்து கொண்டு வேலை செய்துகொண்டிருக்கின்றனர். அவ்வாறானவர்களின் சேவைக்கு ஒத்துழைப்பு வழங்குவதே தற்போதைய நிலையில் அவசியமாக உணரப்படுகின்றது. 

மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கின்ற போது அவர்களுக்காக சேவை செய்யும் எம்மை இவ்வாறு இடையூறு செய்து துன்புறுத்துவது ஒருவகையில், மனக்கிலேசத்தினை ஏற்படுத்துகின்றது.

எனவே, எதிர்வரும் காலங்களில் எமது சேவைக்கு இவ்வாறான இடையூறுகள் விளைவிக்கப்படுமாக இருந்தால் எந்த காலம் என்றுகூட பாராது எமது சேவையினை கைவிட்டு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டியேற்படும் எனவும், மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோக சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours