(காரைதீவு  நிருபர் சகா)

வங்காளவிரிகுடாவில் உருவாகியுள்ள 'அம்பான்' தாழமுக்கம் காரணமாக கடந்த சிலதினங்களாக அம்பாறை கரையோரப்பிரதேசத்தில் அசாதாரண மூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த 3தினங்களாக வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. வழமையான காற்றுகூட வீசவில்லை. ஆனால் நேற்று திங்கட்கிழமை வானம் சீராக காணப்பட்டது.வெயில் பரவலாக எறித்தது.
அதேவேளை நேற்றுநள்ளிரவு  கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டது.

திருக்கோவில் பிரதேசத்தில் குறிப்பாக வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயமுன்றலிலுள்ள கடல் சீற்றமடைந்து ஊருக்குள் வந்துள்ளது. ஆலயத்திற்குள் அலைகள் பிரவேசித்தன.

வழமையாக இப்பகுதியில் கடலலைகள் இவ்வாறு வருவதுண்டு. ஆதலால் அங்கு மண்மூடைகள் அடுக்கப்பட்டிருந்தன. இருந்தும் அலைகள் மேலோங்கிஎழுந்து ஆலய வளாகத்தினுள்ளும் சிலரது வளவுகளுக்குள்ளும்  சென்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திற்று.

ஆலய பரிபாலனசபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேசிடம் இது தொடர்பாக கேட்டபோது ஆலய வளாகத்துள் கடல்நீர் வந்தது உண்மைதான். ஆனாலிது வழமையான செயற்பாடு.மக்கள் அஞ்சத்தேவையில்லை என்றார்.

பொதுவாக கரையோரப்பிரதேசமெங்கும் கடல் பாரிய அலைகளை எழுப்பியவண்ணணம் பலத்த சத்தத்துடன் காணப்படுகிறது. நிந்தவூர் காரைதீவு பாண்டிருப்பு போன்ற பிரதேசங்களில் கரையைத்தாண்டியும் அலைகள் பாய்ந்துள்ளன.இரவுவேளைகளில் கரையோரமக்கள் இடம்பெயர்ந்து உற்றர்உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துவருவதையும் அவதானிக்கக்கூடியதாயுள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லமுடியவில்லை. தோணிகள் யாவும் கரையில் இழுத்துக்கட்டப்பட்டுள்ளன. கடல்மீன்களுக்கு இப்பகுதியில் தட்டுப்பாடு நிலவுகிறது.

சிலதினங்களுக்கு முன்பு கரையோரப்பிரதேச  கிணறுகள் வற்றியதையடுத்து கடல் அலைகள் வழமைபோன்றில்லாது மிக மௌனமாக இருந்தகாரணத்தினால் மக்கள் அச்சமடைந்து மேற்குநோக்கி இடம்பெயர்ந்திருந்தமை தெரிந்ததே.

சமகாலத்தில் அம்பான் சூறாவளி எந்நேரத்திலும் தாக்கலாம் என்ற அச்சமுமுள்ளது.
பொதுவாக இரவானால் இயல்பாகவே மக்கள் மத்தியில் குறிப்பாக கடலோரத்தையண்டிய பகுதியில் வாழும் மக்கள் மத்தியில்பீதி குடிகொண்டு வருவதை அவதானிக்கக்கூடியதாயுள்ளது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours