(காரைதீவு  நிருபர் சகா)


ஏழைகளுக்கு அளப்பரிய சேவையாற்றி மக்கள்மனங்களில் நீங்காஇடம்பிடித்த முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச அவரது மகன்  முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ வழியில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களுக்காக சேவைசெய்யப் புறப்பட்ட இளம்தலைவர்  வினோகாந்த். அவருக்கு ஆதரவளிப்பதன் மூலம் உங்களையும் உங்கள் பிரதேசத்தையும் வளப்படுத்திக்கொள்ளலாம்.


இவ்வாறு அம்பாறைமாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பி.தயாரத்னா புதியவளத்தாப்பிட்டியில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.



 ஜக்கிய மக்கள் சக்தி கட்சியில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ் வேட்பாளர் வெள்ளையன் வினோகாந்த்தை ஆதிரித்து அவரது ஊரான புதியவளத்தாப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசுகையில்  மேற்கண்டவாறு கூறினார்.



அங்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்குமாகாணசபைதவிசாளராகவுமிருந்த சந்திரதாச கலப்பதியும் சமுகமளித்திருந்தார். அதிதிகளுக்கு ஆரத்திஎடுத்து மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.



அங்கு அவர் மேலும் பேசுகையில்:
கடந்த ஜனாதிபதித்தேர்தலில் 90வீத தமிழ்மக்கள் எமது தலைவர் சஜித்பிரேமதாசவுக்கே வாக்களித்தனர். இன்றும் அம்மக்கள் சோர்ந்துபோகாமல் தலைவர் சஜித்தின்மீது நம்பிக்கைவைத்து பிரதமராக அழகுபார்க்க எண்ணுகின்றனர். அதேபோன்று சிறப்பான சேவைசெய்த செய்யக்கூடிய இளம் தலைவர் வினோகாந்தை எம்.பியாக்க முனைவது காலத்தின்தேவையாகும். மும்மொழியிலும் துறைபோன இவர் சேவைசெய்வதில் முன்னனுபவம் உள்ளவர்.



அமைச்சர் பிரேமதாஸா அம்பாறைமாவட்ட்தில் ஒரு தமிழ்மகனை நம்பி தேர்தலில் இடம்கொடுத்தாரென்றால் வினோகாந்தின் திறமை மகத்துவத்தை இங்கு சொல்லவேண்டிய அவசியமில்லை.அவரைத்தான் நானும் நூறுவீதம் சிபார்சுசெய்கிறேன்.



ஏழைமக்களுக்கு ஜனசவிய வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய பெருந்தலைவர் அமரர் பிரேமதாஸா. அவரொரு செயல்வீரன். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? எனவே அவருடைய மகன் சஜித் பிரேமதாசவும் அதேபாணியில் மக்களுக்கான வீட்டுத்திட்டங்களை முன்னெடு;த்துவருகிறார்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தலைவரொருவரை உருவாக்க நினைத்துக்கொண்டிருந்தோம். இந்தக்கட்டத்தில்தான் சஜித் வல்லமைமிக்க வினோகாந்தை நியமித்துள்ளார். அவர் ஏலவே அமைச்சருடனிருந்து பல அபிவிருத்திவேலைகளைச் செய்தவர்.தமிழ்ப்பிரதேசங்கள் எல்லாம் சென்று களம்கண்டவர்.



அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேசசெயலகப்பிரிவுகளில் தமிழ்மக்கள் செறிந்துவாழ்கிறார்கள். அங்கு குடிநீர்ப்பிரச்சினை காலாகாலமாக இருந்துவருகிறது.யாரும் தீர்ப்பாரில்லை.. இதுவரை வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இப்பிரச்சினையை தீர்க்கவில்லை.
குறிப்பாக குண்டுமடு செல்வபுரம் தாண்டியடி கண்ணகிகிராமம் மண்டானை காயத்திரிகிராமம் கோமாரி மல்லிகைத்தீவு மத்தியமுகாம் பெரியநீலாவணை போன்ற பிரதேச தமிழ்மக்கள் வரட்சிக்காலத்தில் குடிநீரின்றி சொல்லொணாக் கஸ்டத்தை அனுபவித்துவருகிறார்கள்.



மல்லிகைத்தீவுக்கிராமத்தில் நிலவிய குடிதண்ணீர்பிரச்சினையால் சிறுநீரகநோய் ஏற்பட்டு சிலர் அநியாயமாக இறந்தனர். அத்தனை அனர்த்தம் நிகழ்ந்தும் இங்குள்ள தமிழ்எம்.பி. அங்கு செல்லவில்லையென அம்மக்கள் அழுதனர். இப்படிப்பட்டவர்களையா இன்னுமின்னும் நாம் தெரியவேண்டும்.



எனவே முதலில் இக்குடிதண்ணீர்ப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கவேண்டுமென்பதே தம்
பி வினோகாந்தின் அவா.பின்னர் ஒவ்வொரு தேவையையும் தலைவர் சஜித்தின்துணைகொண்டு நிச்சயமாக ஒவ்வொன்றாக அவர் தீர்த்துவைப்பார். என்றார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours