(றாசிக் நபாயிஸ், அம்பாறை மாவட்ட பிராந்திய நிருபர்)


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப்பட்டமளிப்பு விழா  புதன் கிழமை (16) ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

இன்றைய முதலாவது அமர்வில் பிரயோக விஞ்ஞானபீடம் மற்றும் பொறியியல்பீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம் பெற்றதுடன், பிற்பகல் கலை கலாசாரபீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா இடம் பெறவுள்ளது.

இரண்டாம் நாள் அமர்வாக  வியாழக்கிழமை (17) காலை 9 மணிக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப்பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம் பெறவுள்ளதுடன், பிற்பகல் முகாமைத்துவ வர்த்தகபீட பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
13ஆவது இப்பட்டளிப்பு விழாவில், மேற்படி ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப்பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளதுடன், 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினையும் 03 பேர் முதுகலைமாணி பட்டத்தினையும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் எம்.ஏ. கரீம் மற்றும் அதே பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஐ.எம். அமீன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இப்பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம், பதிவாளர் எஸ்.சத்தார் மற்றும் பீடங்களின் பீடாதிபதிகள், துறை தலைவர்கள். பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours