(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பில் திருட்டு விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதற்கென 3 வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 315 மதுபான போத்தல்கள் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) இரவு 11 மணி முதல் அமுலாகும் பயணக்கட்டுப்பாட்டுக் காலப்பகுதியில் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.இந்நிலையில் அக்காலப்பகுதியில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதற்கென 3 வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு மதுபான போத்தல்கள், மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அப்பிரிவின் பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தெரிவித்தார்.
குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர், மாமாங்கம், கூழாவடி மற்றும் ஊறணி ஆகிய பகுதிகளில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, 180 மில்லிலீற்றர் கொள்ளவுள்ள 307 சாராய போத்தல்களும் 750 மில்லிலீற்றர் கொள்ளளவுள்ள 8 சாராய போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours