அல்லாஹ்வின் அருள்நாடி ரமழான் முழுவதும் நோன்பிருந்த நமது ஹலாலான ஹாஜத்துக்கள் நிறைவேற இந்த ஈகைத்திருநாள் வழிகோலுமென அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம் சபீஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
புனித நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; ரமழானின் தாற்பரியங்களில் ஈருலக நன்மைகளும் இருக்கின்றன.பிறரின் பசியறிந்து, தேவையுணர்ந்து செயற்படும் மிகப்பெரிய பொதுநலம் நோன்பிலிலுள்ளது.செல்வத்திளைப் பில் உள்ளவனும்,உணவில்லாது அலையும் ஏழையும் இந்த மாதத்தில் பசி,பட்டினி மற்றும் தாகத்துடன் இருப்பதுதான் இதிலுள்ள சமத்துவமாகும். ஏழைகளின் அவலங்கள், தேவைகளை அறிந்து கொண்டோர், இந்தப் பெருநாளில்தான் வாரி, வழங்குகின்றனர். இதனால்தான் இந்தப் பெருநாளுக்கு "ஈதுல்பித்ர்" எனப்படுகிறது.
எனவே,இந்த ஈகைத்திரு நாளில் எம்மால் இயன்றவரை நாம் தர்மம் செய்து, அல்லாஹ்வின் நற்கூலியைப் பெற வேண்டும். எமது ஆத்மாக்களுக்கு அல்லாஹ்விடம் இவை காப்பீடாக ஒப்படைக்கப்படுகின்றன. நோன்பு நோற்றும், இரவில் நின்று வணங்கியும் நல்லமல் புரிந்த நமது நோக்கங்களை அறிந்து கொள்ள அல்லாஹ் போதுமானவன். நமது ரமழான்கால நல்லமல்களைப் பொருந்திக் கொண்டு, வல்லநாயன் ஈருலகிலும் நல்வரம் தர வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். அறியாமல் அள்ளுப்பட்டுச் சென்ற சிலரின் பிழையான தீர்மானங்களால், இன்னும் நமது சமூகம் நோவினைப் பாதைகளிலே நடக்க நேரிடுகிறது. இந்தப்பாதைகளை நேரிய பாதைகளாக மாற்றும் மனநிலைகளை ஆட்சியாளர்களுக்கு அல்லாஹ் வழங்க வேண்டும் என்றும் இந்த நன்நாளில் நாம் பிரார்த்திப்போம். குறுக்கு வழிகளைக் குறிக்கோளாகக் கொண்டு இலக்குகளை அடைய முனைந்தோர், நிரந்தர வெற்றியைப் பெற்றதுமில்லை. அல்லாஹ் நாடிய வழிகளில் எவரும் குறுக்கிட முடியாதென்ற நம்பிக்கையில் தமது, இலட்சியப் பயணங்கள் தொடரட்டும். இதுவே,ஈருலக நன்மைகளையும் ஈட்டித்தரும். அனைவருக்கும் ஈத்முபாரக் என்று தெரிவித்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours