(நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர், எம்.என்.எம் அப்றாஸ், அலி ஜமாஹில்)
நாட்டில் மிகவேகமாக பரவும் டெல்டா பரவலிலிருந்து கல்முனை பிரதேச மக்களை பாதுகாக்கும் நோக்கிலான உயர்மட்டக் கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸின் தலைமையில் வியாழக்கிழமை (12) கல்முனை முஹையத்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.சி சமிந்த லமாகேவாவின் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம் அஸ்மி, கல்முனை இராணுவ படைப்பிரிவு பொறுப்பதிகாரி மேஜர் விஜயகோன், அக்கரைப்பற்று 241 வது பிரிவு இராணுவ பொறுப்பதிகாரி கேணல் அபோயகோன், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹீட் , கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப், லெப்டினன்ட் கேணல் அனஸ் அஹமட், சமீந்த புஸ்பகுமார, டாக்டர் எம்.சராப்தீன் உட்பட கல்முனை பிரதேச அனைத்துப் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், உலமாக்கள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் நாட்டில் தீவரமாக பரவிவரும் கொரோனாவினை கல்முனை பிரதேசத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை உரியமுறையில் பின்பற்றுவதற்கும் மக்களுக்கு பள்ளிவாசல்களின் ஊடாக அறிவிப்பு செய்வதற்கும், பொதுவாக கடற்கரைப் பிரதேச எல்லைகளுக்குள் அதிகமான மக்களின் நடமாட்டங்களை குறைப்பதற்கும், ஒன்றுகூடல்களை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதேவளை கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிக்குட்பட்ட பிரிவில் தொடர்ந்தும் கொரோனா கட்டுப்பாட்டு விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




Post A Comment:
0 comments so far,add yours