நூருள் ஹுதா உமர்

இலங்கையில் இவ்வாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்ட தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் கிரிக்கட் சங்க தலைவர் எம்.எம். நிஜாமுத்தின் தலைமையில் கிரிக்கட் சுற்றுபோட்டி ஒன்று இடம்பெற்றது.

அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் நடைபெற்ற இந்த கிரிக்கட் சுற்றுபோட்டியில் சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தை சேர்ந்த 12அணிகள் பங்குகொண்டிருந்தது. இந்த சுற்றுபோட்டியில் பல அணிகளையும் வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தெரிவான பிளையிங் கோர்ஸ் அணியை எதிர்த்து துடுப்பெடுத்தாடிய ஹோலி ஹீரோஸ் அணியினர் 10 ஓவர்கள் முடிவில் இரு விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 116 ஓட்டங்களை பெற்றனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய றிழ்வான் 35 பந்துகளில் 70 ஓட்டங்களையும் முஸ்பிக் 19 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்று ஆரம்பம் முதல் அதிரடி காட்டினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பிளையிங் கோர்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் காணப்பட்டதுடன் 08 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 56 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டனர். 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சம்பியன் பட்டத்தை ஹோலி ஹீரோஸ் தன்வசப்படுத்தியது. இந்த இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை 35 பந்துகளில் 70 ஓட்டங்களை பெற்ற றிழ்வான் பெற்றுக்கொண்டார். தொடர் நாயகன் விருது பிளையிங் கோர்ஸ் அணி வீரர் றிபான் வசமானது.

இறுதியாட்ட பரிசளிப்பு நிகழ்வில் இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினரும், சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம், தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் கலை, கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் ஆகியோர் விசேட அதிதியாக கலந்து கொண்டார்கள்.  மேலும் சாய்ந்தமருது கிரிக்கட் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள், கிரிக்கட் வீரர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours