(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

கொவிட் சூழ்நிலையின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நோர்வே மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதுவர்கள் இன்றைய தினம்  விஜயமொன்றினை மேற்கொண்டு பல்வேறுபட்ட தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த இரு நாட்டு தூதுவர்களுடன் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனுடன் விசேட கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

நோர்வே நாட்டு தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் ( Trine Joranli Eskedal), நெதர்லாந்து நாட்டு தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் (Tanja Gonfgrijp) ஆகிய இருவருமே குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குறித்த கலந்துரையாடலின் போது  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்கள் தொடர்பாக அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், அரசாங்கத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மாவட்ட மக்களுக்கு தேவைப்பாடாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்தோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராமிய மட்ட உட்கட்டமைப்பு  விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியுள்ளதுடன், இரு நாட்டுத் தூதுவர்களையும் கௌரவிக்கும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவிற்கான மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன்,
மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி. இந்திராவதி மோகன்,
மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன்,
மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours