( காரைதீவு  நிருபர் சகா ,சுமன்)



கல்முனை மாநகரசபையின் முன்னாள் ஆணையாளர் ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக இடமாற்றம் வழங்கப்பட்டு அவ்விடத்தை நிரப்புவதற்காக திருவாளர் என்.சிவலிங்கம் அவர்கள் கடந்த 02ம் திகதி நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தனது கடமைகளை இதுவரையில் பெறுப்பேற்காமல் இருப்பது கல்முனை மக்களின் அபிவிருத்திகளை மேலும் பின்நகர்த்தும் விடயமாகவே இருக்கின்றது என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

அவர் உடன் வந்து தனது பதவியைப் பாரமெடுத்து கல்முனை மக்களின் ஏக்கத்தினைத் தீர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்முனை மாநகரநபையின் ஆணையாளர் எம்.சி.அன்சார் அவர்கள் மாற்றம் பெற்றதன் காரணமாக அவ்விடத்திற்கு நியமனம் பெற்றுள்ள புதிய ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் அவர்களை வரவேற்கும் முகமாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை மாநகரசபையானது அம்பாறை மாவட்டத்தில் மிகப் பிரதானமான சபையாகத் திகழ்கின்றது. ஆனால் அதன் நிருவாகச் செயற்பாடுகள் இதுவரை காலமும் பூச்;சிய நிலையில் வெறுமனே மின்விளக்குகளை மாத்திரம் பொருத்தும் சபையாகவே காணப்பட்டது. இதன் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு நாம் பலமுறை முயற்சி செய்தும் ஆணையாளரின் செயற்பாடுகள் காரணமாக அது கைகூடவில்லை.

ஆணையாளரின் ஊழல் மிகுந்த செயற்பாடுகள் காரணமாக மாநகரத்தின் அபிவிருத்திப் பணிகள் முடக்கப்பட்ட நிலையில் இவர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக இவர் மாநகர ஆணையாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு புதிய ஆணையாளராக பொறியியலாளர் என்.சிவலிங்கம் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஆனால் அவரின் பதவி பாரமெடுப்பு இன்னும் இடம்பெறவில்லை. இதன் காரணமாக கல்முனை மக்களே அதிகம் பதிப்பினை எதிர்நோக்குகின்றனர் என்பதை திருவாளர் சிவலிங்;கம் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே அவர் விரைந்து கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் பதவியினை பொறுப்பேற்று ஏமாற்றப்பட்டிருக்கும் கல்முனை மாநகர மக்களின் அபிவிருத்திக் கனவினை நனவாக்க வேண்டும் என்று வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours