நேற்று (05) இரவு அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிலில் தலைக்கவசம் அணியாமல் சென்று கொண்டிருந்த நபரை நிறுத்தியதாகவும் அவர் நிறுத்தாமல் சென்றதனால் பாதுகாப்பு கடமையில் இருந்தவர்கள் அவரை பலவந்தமாக தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் காரணமாக படுகாயமுற்ற நிலையில் அவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் பொலிஸ் சோதனைச்சாவடியை தாக்கி அழித்ததுடன் பொது மக்களுக்கும் பாதுகாப்பு கடமையில் இருந்வர்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து மேலதிக விசாரணைக்காக வந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரையும் தாக்கியுள்ளனர்.

இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பொது மக்களால் தாக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொறுபதிகாரி உள்ளிட்டோரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் உயர்மட்டக்குழு சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைகள் இடம்பெறும் என உறுதியளித்ததையடுத்து பதற்ற நிலை தணிந்தது.

பாலமுனையில் நடைபெற்ற அசம்பாவித சம்பவம் தொடர்பில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பேசியதாகவும் அவர்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரிடமும் தொலைபேசி மூலமாக அழைத்து நேற்றிரவு பேசியதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

மேலதிக நடவடிக்கைகள் பல்வேறு தரப்பினாலும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அறிய முடிகிறது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours