( காரைதீவு  சகா,சா.சபேசன்)

 கதிர்காம காட்டுப்பாதையில் செல்லும் அடியார்களுக்கு உதவுமுகமாக, நடுக்காட்டில் உள்ள நாவலடி எனுமிடத்தில் வைத்திய முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது.

 காட்டுப்பாதை திறக்கப்பட்ட அன்று(22) ஆரம்பித்த இந்த வைத்திய முகாம், தொடர்ச்சியாக எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நடத்தப்படவிருக்கிறது.

  முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் அழகையா லதாகரனின் ஏற்பாட்டில் 12வது வருடமாக இந்த வைத்திய சேவை நடுக்காட்டிற்குள் நடத்தப்படுகின்றது .


56 மைல் தூரமான காட்டுப் பாதையின் நடுப்பகுதியில் எவ்வித வசதிகளும் இல்லாத இடத்தில் அடியார்களுக்கு இந்த வைத்திய சேவை நடத்தப்படுவது அனைவராலும் வியந்து பார்க்கப்படுகின்றது.


 டாக்டர் அ.லதாகரன் தலைமையிலான வைத்தியர்கள் சுகாதார துறை ஊழியர்கள் தமது சொந்த லீவிலே அர்ப்பணிப்பான சேவையை இரவு பகல் பாராமல் செய்து வருகின்றார்கள். 

 காட்டுப்பாதையில் பல உபாதைகளுடன் நடந்து வருகின்ற அடியார்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது .

காலிலே ஏற்படுகின்ற நோ மற்றும் சகலவிதமான நோய்களுக்கும் அங்கு தற்காலிக சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான அடியார்கள் சென்று அங்கு சிகிச்சை பெற்று சென்றனர்.

 நடுக்காட்டுக்குள் எவ்வித வசதியும் இல்லாத நிலையிலே இத்தகைய வைத்திய சேவையை செய்து வருகின்ற டாக்டர் லதாகரன் தலைமையிலான குழுவினருக்கு அடியார்கள் அனைவரும் நன்றி செலுத்தினார்கள்.

மேலும் ,நாவலடிக்கு வரும் ஒவ்வொரு அடியார்களுக்கும் நடந்து வந்த களையை போக்குவதற்கு இரண்டு பட்டர்களும் ஒரு வெனிவல் தேனீரும் வழங்கப்படுகிறது.  தேவையானால் மேலதிகமாகவும் வழங்கப்படுகிறது.

 களைத்து வந்த அடியார்களுக்கு அது பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours