(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று  (02) மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்  ரீ.எம்.எம். அன்சார்(நளீமி), மாநகர சபை உத்தியோகத்தர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம்  காரணமாக முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் தாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இதன் போது முன்வைத்தனர்.

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் ஒரு வரையறையின்றி மிக அதிகமாக அறவிடப்படுவதாக பொதுமக்கள் பலரும் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதாக மாநகர முதல்வரினால் முன்வைக்கப்பட்ட விடயத்திற்கு, எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் தாம் எதிர்கொள்ளும் சவால்கள், உதிரிப்பாக விலையேற்றம், வாழ்வாதார நெருக்கடிகள் போன்றவற்றினை கருத்தில் கொண்டு தற்காலிகமாக  ஆரம்ப கட்டணமாக 200 ரூபாயும், அடுத்து வரும் ஒரு கிலோ மீட்டருக்கு 100 ரூபாய் விகிதத்தில் அறவிடுவதாக ஆட்டோ சாரதிகள் சங்க பிரதிநிதிகள்  தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் நிலைமைகள் சுமூகமடைந்து எரிபொருள் விநியோகம் சாதாரண நிலைமைக்குத் திரும்பும் பட்சத்தில் குறித்த கட்டணங்களை உரிய நியம விலையில் மாற்றிக் கொள்ளவும் இதன் போது இணக்கம் தெரிவித்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours