( வி.ரி. சகாதேவராஜா) 


கல்முனை வலயத்தில், இம்முறை  வெளியான க.பொ.த.சா.தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி 106 மாணவர்கள் 9 ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம்  தெரிவித்தார்.

 கடந்த ஆண்டு 87 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை 2815 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி இருந்தார்கள். இவர்களில் 3 சி 2 எஸ் சித்திகளை  2194 மாணவர்களும் ,3 சி 3 எஸ் சித்திகளை 1949 மாணவர்களும் பெற்று சித்தி அடைந்தார்கள்.

ஆக, 41 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தி பெற தவறி இருக்கின்றார்கள். மொத்தமாக 78சதவீத மாணவர்கள் சித்தி பெற்றிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 இம்முறை வெளியான பெறுபேறுகளின் படி ,வலயத்தில் முதல் அதிகூடிய 96% சித்தி  மற்றும் அதிகூடிய 32 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்ற பாடசாலையாக கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி திகழ்கின்றது.

 அடுத்தபடியாக 17  மாணவிகள் 9ஏ சித்திகளுடன் கல்முனை மகுமூத் மகளிர் கல்லூரியும், அடுத்தபடியாக 9 மாணவர்கள்  9ஏ சித்திகளுடன் காரைதீவு இ.கி.சங்க பெண்கள் பாடசாலையும் முன்னணியில் உள்ளது.

கல்முனை வலயத்திலே  சாதாரண தர வகுப்புகள் உள்ள 33 பாடசாலைகளில் 96 வீதமான அதிகூடிய சித்தி வீதத்தை பெற்று முதல் இடத்தை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரி திகழ்வது குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours