( வி.ரி. சகாதேவராஜா)

 அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள
 கஞ்சிகுடிச்சாற்றில் 
 உணர்வு பூர்வமாக பேரெழிச்சியுடன்  மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு நேற்று (27)  மாலை இடம்பெற்றது.
 
திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் மாவீரர்களின் பெற்றோர்கள் கதறியழுத கண்ணீரால் கதிகலங்கி நின்றது. சிறிது நேரம் ஒப்பாரி ஓலம் விண்ணைப்பிளந்தது.

அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நிகழ்வில் சுமார் மூவாயிரம் மக்கள் கண்ணீர் மல்க கலந்து கொண்டனர். அரசியல் பிரமுகர்கள் முப்படையினர் புலனாய்வு பிரிவினர் என பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த பல வருடங்களுக்கு(2009) பிற்பாடு இம்முறை அதிகளவான மக்களோடு மிகவும் உணர்ச்சி பொங்க மாவீரர் தின நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 அம்பாறை மாவட்டம் எங்கும் இருந்து பஸ்களிலும் ட்ரக்டர்களிலும் வான்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் மக்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். பெருந்திரளான இளைஞர்களும் வந்திருந்தனர்.

 மாலையில் ஆறு ஐந்துக்கு  மாவீரர் பணிக்குழுத் தலைவர் குட்டிமணி மாஸ்டர் தலைமையில் மாவீரர் லெப்டினன்ட் கேணல்  தாஸின் தாயார் பிரதான ஈகைச்சுடர் ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து 856 வித்துடல்களுக்கு முன்னால் அமர்ந்து கதறி அழுத வண்ணம் மாவீரர்களின் பெற்றோர்கள் சுடரேற்றினார்கள்.

 தொடர்ந்து அகவணக்கம் மாவீரர் தின பாடல் ஒலிக்கப்பட்டது. 

மக்களின் கதறி அழுத வண்ணம் காணப்பட்டனர்.
 நினைவேந்தலில் ஈடுபட்ட அனைவருக்கும் தென்னம்பிள்ளையும், இரவு நேர உணவும் வழங்கப்பட்டது .

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், பொத்துவில் பிரதேச சபையின் உபதவிசாளர் பெருமாள் பார்த்திபன், கல்முனை மாநகர சபை உறுப்பினர் கே. சிவலிங்கம், முன்னாள் உறுப்பினர் எஸ் ஜெயக்குமார் ,மாணவர் மீட்புப்குழு தலைவர் செல்வராஜா கணேஷ், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான த.சுபோதரன் , ந.சசிதரன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் அங்கு கலந்து கொண்டார்கள்.
நன்றியுரையை காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் நிகழ்த்தினார்.
அங்கு வந்த வாகனங்கள் பிரதான வீதியை அடைவதற்கு பலமணி நேரம் எடுத்தது.
மாவீரர் பணிக்குழு இம்முறை பாரியளவில் சிறப்பாக ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours