சாரதி செய்யும் தவறுகளுக்கு புள்ளிகளை குறைத்து அதனுடன் தொடர்புடைய தண்டனைகளை விதிக்கும் முறைமை இலங்கையில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வீதியில் வாகனங்களை செலுத்தும் போது தவறு செய்யும் சாரதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தின் கீழ் 24 புள்ளிகளுக்கு உட்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

ஓட்டுநர் புள்ளிகள் வரம்பு

ஒரு ஓட்டுநர் 24 புள்ளிகள் வரம்பை அடைந்தவுடன், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். குறித்த சாரதி மீண்டும் சாரதி அனுமதி பாத்திரத்தை பெற்றுக் கொள்ள பரீட்சை மற்றும் பயிற்சி மூலம் உரிமத்தை மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

புதிய முறையின் கீழ் அபராதங்களை சம்பவ இடத்திலோ அல்லது தபால் நிலையத்திலோ, இணைய வழியில் செலுத்தலாம். ஒரு ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அதே குற்றத்திற்காக புள்ளிகளும் கழிக்கப்பட்டால் அந்த நபர் அதை நீதிமன்றத்தில் சவால் செய்யலாம்.

அறிமுகமாகும் புதிய முறைமை

ஒரு ஓட்டுநர் ஒரு வருடத்தில் 2 புள்ளிகளை மட்டுமே இழந்தால், அடுத்த ஆண்டு 24 புள்ளிகளை மீட்டெடுக்க அவருக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உருவாக்கப்பட்டு வரும் இந்த முறைமையை அடுத்த வருடம் அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு உத்தேசித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours