( வி.ரி. சகாதேவராஜா)




 தூய அன்னை சாரதா தேவி அம்மையாரின் 170 ஆவது ஜெயந்திதின விழா நாளை மறுதினம் (15) வியாழக்கிழமை ஆகும்.

அதனை முன்னிட்டு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்தில் இல்ல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையில் பாரிய அளவிலான ஜனன தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 அதற்கு முன்னோடியாக நாளை (14)  புதன் கிழமை மாலை 4.30 மணியளவில் கல்லடியில் அன்னையாரின் திருவுருவப்படம் தாங்கிய ரத ஊர்வலம் இடம்பெற இருக்கின்றது.

 மறுநாள் வியாழக்கிழமை ராமகிருஷ்ண மிஷினில் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில்  சிறப்பு அன்னையர் தின விழா அதிகாலை 5 மணியளவில் வேதமந்திரங்கள் மங்களாரதியுடன் ஆரம்பமாகிறது.

அதேவேளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை( 18) கல்லடி சுவாமி விபுலானந்தா
 மணிமண்டபத்தில் பிரதான பொதுநிகழ்ச்சி இடம்பெற இருக்கின்றது.
காலை காலை 9:00 மணிக்கு கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி ஹம்சத்வனி சர்மாவின் பக்தி இசையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.

" தாய்மை நிறை சாரதா"  என்ற தலைப்பிலே சாரதா பாலர் பாடசாலை அதிபர் திருமதி இந்திராணி புஷ்பராஜா  சிற்றுரையாற்ற திருகோணமலை மாவட்ட செயலக மொழிபெயர்ப்பாளர் திருமதி லலிதா சுதாகரனின்ன் சிறப்புரையும் இடம்பெறவிருக்கின்றது.

 காணொளி வாயிலாக இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தா ஜீ மகராஜின் ஆசியுரை இடம் பெற இருக்கின்றது.

  அத்துடன் விவேகானந்த மனித வள மேம்பாட்டு நிலையம் ஜீவனானந்த சமூக சேவைகள் நிலையம் பற்றியும் சாரதைக்களஞ்சியம் இலத்திரனியல் சஞ்சிகை பற்றிய  அறிமுக உரையை  கல்லடி இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்த ஜீ மஹராஜ் நிகழ்த்தவிருக்கின்றார்.


 இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் ஆசியுரை வழங்க இருக்கின்றார். இறுதியில் எழுபது முதியோர்களுக்கு புத்தாடையும் அரிசியும் வழங்கி வைக்கப்பட இருக்கின்றது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours