( வி.ரி. சகாதேவராஜா)
 இந்து சமய  கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் ய.அனிருத்தனன்  அவர்களுக்கு காரைதீவில் நேற்றுமுன்தினம் பெரும்பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது .

நாவலர் ஆண்டை ஒட்டிய சிறப்பு நிகழ்ச்சி கள் காரைதீவு விபுலானந்த அடிகளாரின் மணி மண்டபத்தில் நடைபெற்றபோது இந்த பாராட்டு இடம்பெற்றது.

 இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் அருளானந்தம் உமா மகேஸ்வரனின் உன்னதமான பணிகளை சேவைகளை பாராட்டிய  அதேவேளை  புதிய பணிப்பாளர் அனிருத்தனனின் வருகையை முன்னிட்டு  மேலும்  புரட்சிகரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று கூறி புதிய பணிப்பாளருக்கு பதினைந்திற்கும் மேற்பட்ட பொன்னாடைகளை பொது அமைப்புகள் தாமாக முன் வந்து போர்த்தினர். மாலைகள் சூட்டினர்.

இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்ல உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்  ஆகியோர் முதலில் பொன்னாடை போர்த்து கௌரவிக்க ஏனைய பொது அமைப்புகள் ஆலயங்களின் பிரதிநிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

அதேவேளை , இலங்கை வானொலியில் அறநெறிச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற  அம்பாறை மாவட்ட 127 மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசுகள் வழங்கப்பட்டன.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours