( வி.ரி. சகாதேவராஜா)

 இந்துக்களின்  திருப்பள்ளிஎழுச்சி, திருவெம்பாவை விரதம் மற்றும் ஊர்வலம்  இன்று (28) புதன்கிழமை அதிகாலை கோலாகலமாக ஆரம்பமாகியது.

அந்த வகையில், காரைதீவுஇந்து சமயவிருத்திச்சங்கம் வருடாவருடம் நடாத்திவரும்  திருப்பள்ளி எழுச்சி ஊர்வலமானது இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்து விசேட பூஜையுடன் ஆரம்பமாகியது.

வீதி ஊர்வலம் அதிகாலை 5.30 மணியளவில் நிறைவுற்றதும் கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருவெம்பாவை பூஜையுடன் நிறைவுற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் பூஜையை நடாத்தி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

தொடர்ந்து திருவாசக முற்றோதல் நடைபெற்றது.

நாளை (29) வியாழக்கிழமை அதிகாலை திருவெம்பாவை ஊர்வலமானது மாவடி கந்தசுவாமி ஆலயத்தை சென்றடையவிருக்கிறது.

சிவனை நினைந்து வழிபடும் இவ்விரதம்    28.12.2022ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை ஆரம்பமாகியது.
 தொடர்ந்து 10தினங்கள்  திருவெம்பாவை விரதம் மற்றும் ஊர்வல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

இறுதியில் பத்தாம் நாள் ( 06.01.2023) வெள்ளிக்கிழமை திருவாதிரை தீர்த்தோற்சவத்துடன் திருவெம்பாவை நோன்பு நிறைவடைகிறது.

இக்காலகட்டத்தில்   பிரம்ம முகூர்த்த வேளையாம் அதிகாலை 4-6 மணி வேளையில் ஆலய வழிபாட்டில் ஈடுபடுவதுடன், இவ் ஊர்வலத்திலும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல நடராஜப் பெருமானின் அருளைப் பெறுவது இந்துக்களின் வழமையான செயற்பாடாகும்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours