இந்து கலாச்சார திணைக்களத்தின் அழைப்பின் பேரில் இந்திய தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த உலக புகழ் பெற்ற ஓவியர் மு.பத்மவாசன் அவர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் பெரும் கௌரவம் வழங்கப்பட்டிருக்கிறது.

காரைதீவு  விபுலானந்தா ஞாபகார்த்த பணிமன்றத்தால் "ஓவிய வித்தகர்" என்ற வி ருதும் , தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல சமூகத்தால் ஓவிய சாகரர் என்ற  விருது கள் வழங்கி ஏகப்பட்ட பொன்னாடைகள் போர்த்தப்பட்டு பெரும் கௌரவம் வழங்கப்பட்டிருக்கின்றது .

இந்த நிகழ்வு காரைதீவு சுவாமி விபுலானந்த மணி மண்டபத்தில் நேற்றுமுன் தினம்(25) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது .

அங்கு ஆன்மீக அதிதிகளாக சிவசிறி சண்முக மகேஸ்வர குருக்கள் சிவசிறி சாந்ததரூபன்  ஆகியோர் வேதபாராயணம் ஓதி ஆசி வழங்கினர்.

முன்னதாக நாவலர் பெருமானின் திருவுருவச் சிலைக்கு  ஓவியர் பத்மவாசன் உருத்திராக்க மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அவரது இல்லத்தில் விசேட பூஜையும் இடம் பெற்றது.

கௌரவிப்பு  நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் ,காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன்,  உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன்  , மணிமண்டப முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, மணிமண்டப உபதலைவர் சோ.ஸுரநுதன் , தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் கண இராஜரெத்தினம் உள்ளிட்ட அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

இதற்காக சகல ஏற்பாடுகளையும் இந்து கலாச்சார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் அருளானந்தம் உமா மகேஸ்வரனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி மேற்கொண்டிருந்தார்.

கடந்த ஒரு வார காலமாக ஓவியர் பத்மவாசன் மட்டக்களப்பு பட்டிருப்பு காரைதீவு சேனைக் குடியிருப்பு நாவிதன்வெளி திருக்கோவில் தம்பிலுவில்  போன்ற பகுதிகளுக்கு விஜயம்செய்து அறநெறி மாணவர் ஆசிரியருக்கு ஓவிய பயிற்சி பட்டறையை நடத்தியதுடன் இந்து சமய விளக்க உரையும் நிகழ்த்தியிருந்தார். 

அவர் செல்லும் இடமெல்லாம் கூறியதாவது.. 
"இறைவன் நமக்கு அளித்த பரிசுகள் இந்த கலைகள் .கலைகளை மதிக்காதே நாடு உருப்படாது . கலைஞர்களை மதிக்காத நாடு முன்னேற முடியாது. கலைகளிலேயே இசைக்கலை முக்கியத்துவம் வாய்ந்தது.உயர்ந்தது. நான் ஓவியராக இருந்த போதிலும் இசையை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறேன். ஆறுமுகநாவலரும் சுவாமி விவேகானந்தரும் தமிழர்களுக்கு இரு கண்கள். அவர்களை நினைத்து வழிபட்டால் சைவமும் தமிழும் மேலும் தழைத்தோங்கும். நாமும் பிரகாசிப்போம். கிழக்கு கரையோரம் வளமுள்ள பசுமையான பிரதேசம்.பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்ந்தால் இங்கு தான் வாழவேண்டும்."என்றார்.

 சேனைக்குடியிருப்பிலும் திருக்கோவிலிலும் நாவலர் வீதியையும் அவர் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours