( வி.ரி. சகாதேவராஜா)

 இலங்கையை ஆண்டு பபூர்வீகமாக வாழ்ந்து வரும் தமிழருக்கான காணி போலீஸ் அதிகாரங்களை மறுப்பதற்கு சரத் வீரசேகர யார்? எமது உரிமைகளை நாங்கள் கேட்கிறோம். இடையில் மறப்பதற்கு இவர் யார்?

 இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கேள்வி எழுப்பினார்.

காரைதீவு மனித அபிவிருத்தி தாபன முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா நேற்று முன் தினம் நடைபெற்றது.

 அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் தவிசாளர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

 அந்த நிகழ்வில் கௌரவ அதிதியாக உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, சிறப்பு அதிதிகளாக தாபன உதவி இணைப்பாளர் எம்.ஐ. ரியால், நந்தவன சித்தி விநாயகர்
ஆலய தலைவர் எஸ்.ஜெயமோகன் ,பாடசாலை முகாமைத்துவ குழு தலைவர் திருமதி தர்ஷினி, ஆசிரியை திலகராணி ,உறுப்பினர் சிறிகாந்தன்ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் பேசுகையில்.

 இலங்கை வரலாற்றில் 1960 களில் சிங்கள மக்களோடு தமிழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக நிம்மதியாகவாழ்ந்த வரலாறு இருக்கிறது. ஆனால் இடை நடுவில் தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்க வேண்டும் அடக்க வேண்டும் என்று கருதி சரத்வீரசேகர போன்ற இனவாதிகள் போர்க்கொடி தூக்கிய காரணத்தினால் தான் தமிழ் மக்கள் ஆயுதம் தூக்கவேண்டி ஏற்பட்டது. அதன் விளைவுகளை நாம் அனைவரும் அறிவோம். வேறு வழி இல்லாமல் அன்று ஆயுதம் தூக்கிய தமிழர்கள் சமகாலத்தில் அரசியல் போராட்டத்தை நடத்தி வந்தார்கள்.


 மூவின மக்கள் வாழுகின்ற இந்த நாட்டிலே அனைத்து இன மக்களும் சுதந்திரமாக நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் அதிகாரங்களும் உரிமைகளும் சகலருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். இன்று அதற்கான காலம் ஓரளவு கனிந்து வருகின்ற வேளையிலே எண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி உடைத்தது போல் சரத் வீரசேகர போன்ற இனவாதிகள் அதனை குழப்ப முயற்சிக்கிறார்கள்.

 இவர் போன்றவர்கள் இருக்கும் வரைக்கும் இந்த நாட்டிலே அமைதியோ நிம்மதியோ சுதந்திரமோ கிடைக்கப் போவதில்லை.இது மட்டும் நிச்சயம்.

இம் முறை பேரேழுச்சியுடன் இடம் பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் ஒன்றே போதும் எதிர் காலம் எப்படி இருக்கும் என்று. இதனை இவர் போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் பூர்வீகமாக காலாகாலமாக ஆண்டு வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு உரிமைகளோ சுதந்திரங்களோ கொடுக்க முடியாது ஆனால் எங்கிருந்தோ வந்த சீனக்காரர்களுக்கு இந்த நாட்டை தாரை வார்க்க முடியும் . இது என்ன நியாயம்?


புலம்பெயர் நாட்டில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் இன்றைய இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றார்கள். ஆனால் இவர் இனவாதிகளின் பேச்சுக்கள் அந்த உதவியை தடுத்து நிறுத்துகின்றது .

இந்த நிலைமையில் இலங்கை 10 வருடங்கள் போனாலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை மீள முடியாது போகலாம்.என்றார்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours