தமிழ்த்தலைவர்கள் என்று கூறப்படுபவர்களால் தமிழ் மக்கள் விரும்பிய சமஸ்டியையோ அல்லது நிரந்தரமான தீர்வையோ ஒருபோதும் பெற்று தர முடியாது. அதைப்பெற்றுத்தரப் போவதுமில்லை.
இவ்வாறு இனிய பாரதி என அழைக்கப்படும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.புஸ்பகுமார் தெரிவித்தார்.
காரைதீவிலுள்ள அம்பாறை ஊடக மையத்தில் இடம் பெற்று பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அவர் அங்கு மேலும் கூறுகையில் :
நாங்கள் சமஸ்டியை பெற்று தருவோம் ஐநாவில் உங்களுக்கான தீர்வைப் பெற்று தருவோம் என்று காலாகாலமாக கூறி தமிழ் மக்களை ஏமாற்றி வந்தவர்கள் இன்று தங்களுக்குள் பிளவு பட்டு நிற்கின்றார்கள்.
இந்த நேரத்திலே சமஸ்டி வருமா என்று கேட்டால் ஒரு போதும் வரப்போவதில்லை. ஆனால் இந்த நிலைமை ஜனாதிபதிக்கு சாதகமாக இருக்கும்.
அவர்தான் 2000ஆம் ஆண்டில் யுத்தத்தை ஏற்படுத்தி விடுதலை புலிகளை பிளவடையச் செய்தவர். இன்று தீர்வு தருகின்றேன் ஒன்று சேருங்கள் என்று கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதறடித்துள்ளார். ரணில் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வை தரப் போவதில்லை .
தலைவர் பிரபாகரனால் அன்று உருவாக்கப்பட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு .அன்றிருந்தே பிளவு ஆரம்பம். ஆனந்த சங்கரியை துரத்தியது . பின்னர் சுரேஷ் .பிளவு என்பது அதற்கு புதிதல்ல. இன்று தங்களுக்குள் ஒருவரை ஒருவர் துரத்தி பிளவுபட்டு நிற்கின்றது. மக்களின் அபிலாசைகள் தேவைகள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. சுயநல அரசியல் செய்கிறார்கள். இனி மக்கள் ஏமாறமாட்டார்கள்.
இன்று நாடு அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது .இந்த நேரத்தில் ஆயிரம் கோடி செலவழித்து ஒரு ஊராட்சி மன்ற தேர்தல் ஒன்று அவசியமா? இங்கு மக்கள் உணவுக்கு போராடுகின்றார்கள். எனவே நிலையான நிரந்தரமான கட்டமைப்பு வரும் வரை இந்த தேர்தல் என்பது அவசியமற்றது.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் 13ஐ அமுல் படுத்துவதாக கூறுகிறார்.
நிச்சயமாக அவரால் முடியாது .வெளிநாட்டு அழுத்தங்கள் இன்னும் சிலரின் நெருக்குதல் தான் காரணம். அவரால் அது முடியாது. அவர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவரும் இல்லை. அவருக்கு ஜால்ரா போடும் தலைவர்கள் அவரை நம்பி பேசுகிறார்களாம். ஒன்றுமே நடக்கப் போவதில்லை.

Post A Comment:
0 comments so far,add yours