நூருல் ஹுதா உமர்
உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் தேசிய ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் தேசிய உணவுப்பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பர் தலைமையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து மூன்று உணவகங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பழுதடைந்த சம்சா வைத்திருந்தமை, ஹோட்டல் கழிவு நீரை முறையாக அகற்றாமை, குளிரசாதனப் பெட்டியை முறையாக பராமரிக்காமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட உணவகங்கள் மீது 15000/-, 10000/-, 5000/- என்ற அடிப்படையில் தண்டப்பணம் செலுத்த கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவை பிறப்பித்துள்ளது.
உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார பரிசோதர்களினால் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. மக்களதும், பாடசாலை மாணவர்களதும் சுகாதாரத்தையும், உணவுச்சுகாதாரத்தையும் நடைமுறைப்படுத்தவும், பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இவ்வாறான தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார். மேலும் இனிவரும் காலங்களில் பகல், இரவு நேர உணவு நிலைய திடீர் பரிசோதனைகளும் இடம் பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours