( வி.ரி. சகாதேவராஜா)


மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள உறுப்பினர் ஒருவரை உருவாக்கவே மாதவனை மயிலந்தனை சிங்கள குடியேற்றம் திட்டமிட்டு அரங்கேறி வருகிறது. இதற்கு ஆளுநர் உரம் போடுகிறார்.

 இவ்வாறு தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தினநினைவு  நிகழ்வில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இந் நிகழ்வு திருக்கோவில் காயத்ரி கிராமத்தில் தமிழரசுக் கட்சி உறுப்பினர் நந்தபாலு தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது . காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலும் கலந்து சிறப்பித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்....
மட்டக்களப்பு மாவட்டத்தில் 76% தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கே இதுவரை சிங்கள பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது மாகாண சபை உறுப்பினரோ இல்லை. எதிர்காலத்தில் அங்கு சிங்கள உறுப்பினர் ஒருவரை உருவாக்குவதற்காகவே தமிழ் மக்களின் விவசாய பிரதேசமான மாதவனை மயிலந்தனையில் சிங்கள குடியேற்ற திட்டத்தை ஆளுநர் தொடக்கம் அரசாங்கம் வரை செய்து வருகிறது.

 
 யுத்தம் மௌனித்து 14 வருடங்கள் முடிந்து விட்டது .ஆனால் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எதனையுமே செய்து முடிக்கவில்லை.
இந் நிலையில் எங்கள் மீது பலர் விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். நாங்கள் ஒருபோதும் வீதி போட்டுத் தருவோம் வீடு கட்டித் தருவோம் என்று வாக்கு கேட்டதில்லை. நாம் தந்தை செல்வா வழியிலே அஹிம்சை வழியில் உரிமைகளை பெற ஒற்றுமையாக  அரசியல் பயணத்தில் பயணிக்கின்றோம். எமது தமிழ் மக்கள் சொந்தமண்ணிலே சுதந்திரத்துடன் வேண்டும் என்ற ரீதியிலே நாங்கள் அகிம்சை வழியில் போராடி வருகின்றோம்.
 சிங்கள பேரினவாதம் ஜனநாயகம் என்ற போர்வையிலே அதனை திட்டமிட்டு நசுக்க சிங்களர்களை குடியேற்றுவதற்கு ஆளுநரைப் பயன்படுத்தி வருகின்றது.

மாதவனை மயிலந்தனைபகுதியில் தமிழர்களுடைய காணியை அடாத்தாக பிடித்து சிங்களவர்களுக்கு கொடுப்பதற்கு காணி அளக்கப்பட்டு வருகின்றது.

 இன்று தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்ப்போம் என்று ஜனாதிபதி ரணில் முன்வந்திருக்கின்றார். உண்மையில் அவர் அப்படி செய்வாராக இருந்தால் இலங்கை அரசியல் அரங்கில் ஒரு பொருத்தமான நீதியான மாபெரும் தலைவர் ரணில் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
 துரதிஷ்டவசமாக இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம்  நீண்ட காலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றார்கள். அதன் காரணமாகவே தமிழ் மக்களால் யாரையும் நம்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
 தந்தை செல்வா பல ஏமாற்றங்களை அன்று சந்தித்தார் .அவர் சிங்களத் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் பிரகடனம் கூட பிற்காலத்தில் கிழித்து எறியப்பட்டது அல்லது அமுலாக்கப்படவில்லை. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்தது தமிழினம். இன்று யாரையும் நம்பத் தயாரில்லை என்ற நிலைக்கு வந்திருக்கின்றது. இனியும் ஏமாறமுடியாது. எனவேதான் மிகவும் கவனமாக நிதானமாக பயணிக்கிறோம்.மக்களும் நிலையை உணர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours