(வி.ரி. சகாதேவராஜா)


இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் எதிர்வரும்  06ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பான பதாகைகள் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகல 7மாவட்டங்களையும் இணைத்து 46நாட்களில் 98ஆலயங்களைத்தரிசித்து 815கிலோமீற்றர் தூரத்தை நடந்துகடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காமபாதயாத்திரையாககருதப்படுகின்றது.

கடந்த 23வருடங்களாக சைவமரபு பாரம்பரியத்துடன் இடம்பெற்றுவரும் இப் பாதயாத்திரை கதிர்காமக்கந்தனாலய கொடியேற்றத்தினத்தில் கதிர்காமத்தைச் சென்றடைவது வழமையாகும்.

சந்நதியில் மே 06ஆம் திகதி அதிகாலை நடைபெறும் விசேடபூஜையினைத் தொடர்ந்து மோகன்சுவாமியால் வேலாயுதமானது கதிர்காம பாதயாத்திரைக்குழுத்தலைவர்  ஜெயாவேல்சாமியிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்படும்.

தொடர்ந்து ஆரம்பமாகும் பாதயாத்திரை வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து ஜெயாவேல்சாமிஅணியில் வழமையாக பயணிக்கும் நூறுபக்தர்களுடன் மீண்டும் பாதயாத்திரை இடம்பெறும்.

பாதயாத்திரைக்கான சகல அனுமதிகளும் வழமைபோல பெறப்பட்டிருப்பதாக பாதயாத்திரைக்குழுத்தலைவர் ஜெயாவேல்சாமி  தெரிவித்தார்.

கதிர்காம ஆடிவேல்விழா உற்சவம்.

இதேவேளை கதிர்காம ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் வைபவம் எதிர்வரும் மே 6ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.
எனவே யூன் 19ஆம் திகதி  கொடியேற்றம் இடம்பெற்று யூலை 4ஆம் திகதி  எசலபெரஹராவுடனான தீர்த்தோற்சவம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

எதுஎவ்வாறிருப்பினும் உற்சவம் தொடர்பான இறுதி முடிவுகள் காட்டுப்பாதை திறப்பு உற்சவ காலம் பெரஹரா தொடர்பிலான இறுதிக்கட்ட தீர்மானங்கள் முடிவுகள் மொனராகல மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவிருக்கும் முக்கிய கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

பாதயாத்திரை.

1972ஆம்ஆண்டில் அமெரிக்க முருகபக்தர் பற்றிக்ஹரிகன் கதிர்காம பாதயாத்திரையை ஒழுங்கமைக்கப்பட்ட குழுவடிவில் ஆரம்பித்தார். அதன்தொடர்ச்சியாக 1978இல் அவர் ஓய்வுபெற்றதும் அவர்தாங்கிவந்த வேலை காரைதீவைச்சேர்ந்த வேல்சாமி மகேஸ்வரனிடம் ஒப்படைத்தார்.

அன்றிலிருந்து 21வருடங்களாக வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றுவந்தது.கடந்த இரண்டு வருடங்களாக ஜெயாவேல்சாமி இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
 ஆரம்பத்தில் வெருகலிலிருந்து இது இடம்பெற்றது. எனினும் நாட்டின் அமைதிநிலவியபிற்பாடு 2012முதல் சந்நிதியிலிருந்து இப்பாதயாத்திரை ஆரம்பமானது 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours