(சுமன்)
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 24 மணிநேர தடையின்றிய மின்சாரம், நாவிதன்வெளி பிரதேசத்திற்கு தனியான மின்பாவணையாளர் நிலையம் என்பவற்றுக்கான கோரிக்கை...
(பா.உ கலையரசனால் பாராளுமன்றில் முன்வைப்பு)
மட்டக்களப்பு, அம்பாறை போன்ற ஏனைய வைத்தியசாலைகளிலும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள 24 மணிநேர தடையின்றிய மின்சார வசதியினை அதற்கு அடுத்த நிலையில் அதிக நோயாளர்கள் பயன்பெறும் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் பின்தங்கிய, பரந்துபட்ட பிரதேசமாகிய நாவிதன்வெளி பிரதேசத்திலும் ஒரு மின்பாவனையாளர் காரியாலயம் அமைக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கான சேவை இலகுவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தமித் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
மின்சக்தி, வலுசக்தி அமைச்சுக்கான பாதீட்டு விவாதத்தின் போதே பாராளுமன்ற உறுப்பினரால் இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்திலே மிகவும் பிரபலமான, அதிக மக்கள் சென்று தங்கள் நோய்களைத் தீர்க்கும் வைத்தியசாலைகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதற்கு அடுத்த படியாக கல்முனை வைத்தியசாலை இருக்கின்றது.
24 மணிநேர மின்சார வசதிகள் பல வைத்தியசாலைகளுக்கு வழங்கியிருந்தாலும் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அவ்வாறான வசதி இதுவரை இல்லை. கடந்த காலங்களில் மின்தடை காரணமாக அங்கு பல அசௌகரியங்களை எதிர்நோக்கி இருக்கின்றார்கள். குறிப்பாக பொத்துவில்லில் நூறு கட்டில்களைக் கொண்ட வைத்தியசாலைக்குக் கூட 24 மணிநேர மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அதனை விட அதிகளவான நோயாளர்கள் சிகிச்சை பெறும் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்படவில்லை. எனவே கல்முனை ஆதார வைத்தியசாலைக்கும் அந்த மக்களின், நோயாளிகளின் தேவையாக இருக்கின்ற 24 மணிநேர தடையின்றிய மின்சார வசதியினை ஏற்படுத்தித் தர வேண்டும்.
அங்கு சிலவேளைகளில் மின்சாரத் தடை ஏற்படுகின்ற போது அங்கிருக்கின்ற நோயாளிகள், வைத்தியர்கள், ஊழியர்கள் மிகவும் கஸ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். மட்டக்களப்பு, அம்பாறை போன்ற ஏனைய வைத்தியசாலைகளிலும் ஏற்படுத்திக் கொடுத்துள்ள அந்த அந்தர்ப்பத்தை கல்முனை ஆதார வைத்தியசாலைக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாது இன்று எல்லா இடங்களிலும் மின்சார சபையின் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த பாதீட்டின் போது கூட நாவிதன்வெளி பிரதேசம் ஒரு பின்தங்கிய, பரந்துபட்ட பிரதேசம் அங்கும் ஒரு மின்பாவனையாளர் காரியாலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தேன். அதற்கான சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் பூரணமாக அது நிறைவுசெய்யப்படவில்லை.
நாவிதன்வெளி பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட பிரதேசம் வீரகொடையோடும், ஏனைய பிரதேசங்கள் கல்முனையுடனும் இணைத்து சேவை வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது இப்பிரதேசம் மழைகாலங்களில் நாலாபுறமும் நீரினால் சூழப்படுகின்ற பிரதேசம். இக்காலகட்டத்தில் அங்கு மின்தடை ஏற்படுகின்ற போது கல்முனை மற்றும் வீரகொடைக்கு அறிவித்தே அவர்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறான விடயங்களையும் கருத்திற்கொண்டு நாவிதன்வெளிக்கென்று ஒரு பாவனையாளர் காரியாலயத்தை உருவாக்கி அந்த மக்களுக்கான சேவையை இலகுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours