(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய அலுவலகம் 2023ஆம் ஆண்டின் 75ஆவது வருட சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
 
மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய பிரகடனத்திற்கு இணங்க “சகலருக்கும் சுதந்திரம், சமத்துவம், நீதி” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்ட
இந்நிகழ்வு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் எ. எல்.இஸ்ஸதீன் தலைமையில் இன்று (15) திகதி இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன் கலந்து கொண்டு நிகழ்வின் ஆரம்ப உரையினை நிகழ்த்தியிருந்தார்.

இதன்போது சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை, தடையின்றி நடமாடுதல் போன்ற பிரதான 30 உரிமைகள், தனிமனிதன் கட்டாயம் அனுபவிக்க வழிவகுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இவற்றை பாதுகாப்பதற்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் இதன்போது விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் ஆகியோர் மனித உரிமைகளை பாதுகாக்க எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் இதன்போது தெளிபுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன்,  மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ், சிறைச்சாலை, சிறுவர் நன்னடத்தை பிரிவு போன்ற அரச திணைக்களங்களின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours