ஆயிரகக்கான மாணவர்களை உருவாக்கிய ஓய்வு நிலை  பேராசிரியர் யோகராசா சுகயீனமடைந்திருந்த நிலையில் இன்று இவ்வுலகை விட்டு மறைந்தார்.

ஈழத்து இலக்கியப் பரப்பில்   “கருணை யோகன்” என்ற புனை பெயரில்  புகழ் பெற்றிருந்தவர் யாழ்ப்பாணம் கரணவாய் மண்ணின் மைந்தர் செல்லையா யோகராசா. 1960-1972 வரை    அந்தப் புனைபெயரில் இயங்கிக் கவிதை கதைகளை எழுதி வந்த  அவர்,  பின்னர் ஆய்வுத்துறையைத் தேர்ந்து கொண்டு தன் சொந்தப் பெயரில் எழுதத் தொடங்கினார்.   நவீன தமிழ் இலக்கியம்,தமிழியல் ஆய்வு, ஈழத்து இலக்கியம்,   சிறுவர் இலக்கியம், பெண்கள்  இலக்கியம், நாட்டாரியல், கல்வி என்று பலதுறை களில்  ஆய்வுகளை  மேற்கொண்டு வருபவர் அவர்.

சுறுசுறுப்பாக இயங்கும் இலக்கியத் தேனியாக இலங்கையின்  பல பாகங்களையும் இலக்கியச் செயற்பாடுகளுக்காகச் சுற்றிவருபவர்.

பிரதேசவாதம், சாதிமத வேறுபாடு என்பவை இம்மியும் சேராத,படைப் பு கருதிய-அதன் ஆழ அகலம் குறித்துப் பேசுகிற,  காத்திரமான  விமர்சகராகப் பார்க்கப்படுபவர்.   அந்த வகையில் சிங்கப்பூர், மலேசியா, இலண்டன் ,சுவிற்சலாந்து, பிரான்ஸ், தமிழ்நாடு ஆகிய நாடுகளில் இடம்பெற்ற மாநாடுகளில் அவர் வாசித்த ஆய்வுக் கட்டுரைகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கன.

 அவர்  நமக்குத் தந்துள்ள நூல்கள்

1-ஈழத்து இலக்கியமும்,இதழியலும்

2-இலக்கியத் தேட்டம், ஈழத்து நவீன இலக்கியம்

3-ஈழத்து தமிழ் நாவல்

4-ஈழத்து முச்சந்தி இலக்கியம்

5-பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை

6-ஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு

7-ஈழத்து நவீன இலக்கிய உருவாக்கலும்,பெண் ஆளுமைகளும்,

8-ஈழத்து நவீன கவிதை

9-இன்றைய இலக்கியங்களில்

இதிகாசப் பெண் பாத்திரங்கள்,

10-ஈழத்துத் தமிழியல் சார் தமிழ் ஆய்விதழ்கள்

11- ஈழத்து நவீன இலக்கியங்கள்- படைப்பாளர்கள்- தடங்கள்(76 நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளின் தொகுப்பு) என்பன முக்கிய நூல்களாக  அறிஞர் பெருமக்களால்  எடுத்துக் காட்டப்படுவன.

பதிப்பாசிரியராகவும் தொகுப்பாசிரியராகவும் செயற்பட்டு  இன்னும் சிலநூல்களைத் தந்திருக்கின்றார் அவர்.

1- மாற்று நோக்கில் சில கருத்துக்களும் ,நிகழ்வுகளும்

2- ஈழத்து சிறுவர் பாடல்கள் களஞ்சியம்

3-ஈழத்து சிறுவர் இலக்கிய களஞ்சியம்

4-சங்க காலம் முதல்   சமகாலம் வரை, என்பனவும், மீள்பதிவு செய்யப்பட்ட அவர்தந்த அசன்பே சரித்திரம், காலங்கள் சாவதில்லை(நாவல்) என்ற நூல்களும் இலக்கிய நேசர்களால் பெரிதும் வரவேற்கப்படுபவை.

ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பாக கிழக்கிலங்கை தமிழ் இலக்கிய வளர்ச்சியில்  தன் ஆய்வுகள் மூலம்  பெரும்  பங்காற்றிவரும் செ.யோகராசா தனது ஆய்வுப் பணிக்காக  விருதுகள் பல வென்றவர்.

கலாநிதிப் பட்ட  ஆய்விற்காகப் பெற்ற சு.வித்தியானந்தன் விருது, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை நூலுக்குக் கிடைத்த இலக்கியப் பேரவை விருது, ஈழத்து நவீன கவிதை : புதிய உள்ளடக்கங்கள்,புதிய தகவல்கள், புதிய தரவுகள் நூலுக்குக் கிடைத்த அரச சாஹித்ய விருது, ஈழத்து நாவல், ஈழத்து இதழியலும்,  இலக்கியமும் என்ற நூல்களுக்குக் கிடைத்த வடமாகாண சபை விருது,கலை வாருதி விருது,  தேனக கலைச்சுடர் விருது  என்பன   அவற்றுள் சில.

யாழ்ப்பாணம் கரணவாய் என்னும் ஊரில் செல்லையா- இலட்சுமி தம்பதியின் மகனாக1949ல்  பிறந்தவர்- .யோகராசா.ஆரம்பக் கல்வியை யாழ் கரணவாய் வித்தியாலயத்திலும்,உயர் கல்வியை யாழ் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றவர்.

கலைமாணி தமிழ் சிறப்பு, இளந்தத்துவமாணி,முது கலைமாணி,கல்வி டிப்ளோமா,கலாநிதிப் பட்டங்களைப் பெற்றவர்.இவை தவிர,பிரவேச பண்டிதர் பரீட்சை,சைவப்புலவர் பரீட்சை என்பவற்றிலும் தகைமை பெற்றிருப்பவர்.

அஞ்சல் அதிபராக,பாடசாலை ஆசிரியராக,கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளராக, தமிழ்த்துறைத் தலைவராக, பேராசிரியராக கடமையாற்றி ஓய்வுபெற்றவர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours