நம் மக்களின் உண்மையான பிரச்சனையையும், உணர்வினையும் போராளியைத் தவிர எவரும் உணர்ந்து கொள்ள முடியாது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவரும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய நா.நகுலேஸ் தெரிவித்தார்.
ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவருமான நா.நகுலேஸ் இன்றைய தினம் தன் பிரச்சாரப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.
களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை மேற்கொண்டு தேர்தல் துண்டு பிரசுர விநியோகத்தை ஆரம்பித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நம் மக்களின் உண்மையான பிரச்சனையையும், உணர்வினையும் போராளியைத் தவிர எவரும் உணர்ந்து கொள்ள முடியாது. அந்த அடிப்படையில் எமது மக்களின் அபிலாசைகளையும், மாவீரர்களின் தியாகங்களையும், போராளிகளின் வாழ்வியலையும் என்றும் என் மனதில் நிறுத்தியவனாக நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் சங்குச் சின்னத்தில் இலக்கம் 3ல் போட்டியிடுகின்றேன்.
எனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை இன்று களுவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையாரின் அருளாசியுடன் ஆரம்பித்துள்ளேன்.
எமது மக்கள் போராளிகளை என்றும் கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அல்லலுற்ற மக்களின் துயர் கண்டு வீரச்சமர் புரிந்தவர்கள் நாம் என்றும் எம்மக்களுக்காகாக போராளிகள் நாம் நிற்போம். எம்மை பலப்படுத்தி ஜனநாயக படியை உருவாக்குவது எமது மக்களின் வாக்குப் பலத்திலேயே உள்ளது என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours