அபு அலா 

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார 
அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க தனது கடமையை இன்று (18) பொறுப்பேற்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் நேற்றையதினம் (17) அவருக்கான கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சின் உதவிச் செயலாளர் எஸ்.கரன், சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி றிஸ்வானி றிபாஸ் அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான இவர், கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக பதவி வகித்த இந்நிலைமையிலேயே இவருக்கான இக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

இவர், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு திணைக்களங்கள், பிரதிப் பிரதம செயலாளர் மற்றும் பல அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளில் வினைத்திறன் மிக்க அதிகாரியாகவும், சிறந்த வழிகாட்டுதல்கள், நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாட்டு திறமைகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டே இவ்வமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours