எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வாழும் கலை அமைப்பினரினால் இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் இன்று (09) புதிய மாவட்ட செயலகத்தில் வழங்கி வைத்தார்.
வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகர் தவத்திரு ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர் அவர்களால் இளைஞர், யுவதிகளுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டு உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு 160 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பல அரிய மாற்றங்களை இளைஞர், யுவதிகளுக்கிடையே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மயிலம்பாவெளியிலுள்ள வாழும் கலை நம்பிக்கை கிராமத்தில் இவர்களுக்கான முழுநேர வதிவிடப் பயிற்சிநெறி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பயிற்றுவிக்கப்பட்ட வளவாளர்களால்
இளைஞர் யுவதிகளுக்கு தன்னை அறிதல், பிறரை அறிதல், தன்னை வெளிப்படுத்தல், நம்பிக்கைக்குரிய நடத்தை வெளிப்பாடு, சவாலுக்கு முகம் கொடுத்தல், சுய மதிப்பீடு போன்ற பல விடயங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர்களான சிவசங்கரி கணகேஷ்வரன், வை.சஜீவன், வாழும் கலை அமைப்பின் இணைப்பாளர், கே.அருள்நிதி, வாழும் கலை அமைப்பின் செயலாளர் திருமதி யசோதா, இலங்கைக்கான வாழும் கலை அமைப்பின் இளைஞர்பயிற்சிக்கான பயிற்றுவிப்பாளர் பிரசாந்த் சர்மா, மற்றும் துறைசார் நிபுணர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டதுடன் இந் நிகழ்வில் பங்குபற்றிய அதிதிகளுக்கு கௌரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post A Comment:
0 comments so far,add yours