பாறுக் ஷிஹான்- 

தொடரும் தபால் தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு-தபால் அலுவலகங்கள் அனைத்தும் பூட்டு


தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம்  இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு  கோரிக்கைகளை முன்வைத்து  இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் தொடங்கினர்.

மத்திய தபால் பரிமாற்றத்தில் தொடங்கிய இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் நாடு தழுவிய அளவில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் தபாலக தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக    இன்று (18) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல   தபால் நிலையங்கள்    மூடப்பட்டிருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள்  ஊழியர்கள் ஆதரவளித்தமையினால்  தபால் அலுவலக சேவைகள் யாவும்  முடங்கியுள்ளன.

இதன்படி   அம்பாறை மாவட்டத்தில்  கல்முனை   பிரதான தபாற்கந்தோர் தவிர  12 தபால் நிலையங்கள்  குறித்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்ததுடன்  இவ்வேலை நிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அத்துடன் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில்  ஈடுபட்டுள்ளதையும் காண முடிகின்றது.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள்  சங்கத்தின் தலைவர் தேசமான்ய யூ.எல்.எம். பைஸர்  ஜே. பி இப்போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துக்களை பின்வருமாறு குறிப்பிட்டார்.

அதாவது தமது பிரச்சினைகளை உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிடின் எமது போராட்டம் காலவறையின்றி தொடரும் என்றார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours