(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
90 வருடப் பழமை வாய்ந்த காரைதீவு - மாவடிப்பள்ளி பெரிய பாலத்தினை புனர்நிர்மாணம் செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை (20) இடம்பெற்றது.
அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் வேண்டுகோளுக்கமைய, மாவடிப்பள்ளி பெரிய பாலம் சுமார் 247 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான அமைச்சர் விமல் ரத்நாயக்க பிரதம அதிதியாகவும், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் எல்.ஜி. வசந்த பியதிஸ்ஸ கெளரவ அதிதியாகவும், பாராளுமன்ற உறுப்பினர் முத்து ரத்துவத்தை, பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல ரத்னாயக்க ஆகியோரும் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் மாவட்ட செயலாளர் சிந்தக அபயவிக்ரம, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் அலியார், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை பொறியியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.





Post A Comment:
0 comments so far,add yours