நூருல் ஹுதா உமர்
காத்தான்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை விரைவாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக, இதற்காக கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், வரைபடங்கள் மற்றும் நில அளவைத் திணைக்களத்தின் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில், இன்று (31) காத்தான்குடி நகர சபைத் தவிசாளரின் அலுவலகத்தில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது, குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக மேலதிகமாக தேவையான விடயங்களை தாமதமின்றி ஆவணப்படுத்தி சமர்ப்பிக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளரிடம் அறிவுறுத்தல் வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் முன்வைக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம், நீண்டகாலமாக பிரதேச அபிவிருத்திக் குழுவின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், நேற்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
குறித்த காத்தான்குடி பிரதான பஸ் தரிப்பு நிலைய அபிவிருத்தி வேலைத்திட்டம், உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.

Post A Comment:
0 comments so far,add yours