நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு பாடசாலை ஆராதனை மண்டபத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் இன்று (08) நடைபெற்றது.

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், முன்னாள் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், கணக்காளர் க.லிங்கேஸ்வரன், பிரதிக் கல்வி பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், யூ.எல். றியால், எம்.எல்.எம். முத்தரிஸ், ஏ. சஞ்சீவன், முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ரமழான் மாதத்தின் ஆன்மீக முக்கியத்துவம், நோன்பின் அர்த்தம் மற்றும் மனிதநேயப் பண்புகள் குறித்து ஆசிரியர் மௌலவி ஏ.ஜி.எம். நௌபாஸ் (நளீமி) சிறப்பு உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து கருத்துரையாற்றிய கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயம் கல்முனை பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வந்த பாடசாலைகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார். பாடசாலையின் வரலாறு, கல்விசார் முன்னேற்றம் மற்றும் சமூகத்துடன் கொண்டுள்ள உறவு ஆகியவை பாராட்டத்தக்கவை எனவும் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் கல்வித் தரத்தை மேலும் உயர்த்துவதற்காக ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து இஃப்தார் நிகழ்வில் பங்கேற்று நோன்பு திறந்தனர். பாடசாலை சமூகத்திற்கிடையிலான ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு சிறப்பாக அமைந்தது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours