நூருல் ஹுதா உமர்


கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு சமய பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் அஷ்-ஷேக் முனீர் முழப்பர் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) விஜயமொன்றை மேற்கொண்டார்.

பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் விசேட அழைப்பினை ஏற்றே இவ்விஜயம் இடம்பெற்றது. விஜயத்தின் போது, பள்ளிவாசலில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய புனர்நிர்மாண மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் தொடர்பாக பிரதி அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்ததுடன், அவற்றின் அவசியம் குறித்தும் கலந்துரையாடினார்.

மேலும், பள்ளிவாசலுக்குச் சொந்தமான வக்பு சொத்துக்களின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முறையான பராமரிப்பு குறித்து விசேட கவனம் செலுத்திய அவர், தற்போதைய நம்பிக்கையாளர் சபையினரின் செயல்பாடுகளையும் பாராட்டினார்.

இதனையடுத்து, நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் ஜமாஅத்தினரைச் சந்தித்த பிரதி அமைச்சர், பள்ளிவாசலின் எதிர்காலத் தேவைகள், சமூக முன்னேற்றத் திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கினார்.

இவ்விழாவில், பிரபல இரசாயனவியல் விரிவுரையாளர் எம்.ஆர். பஹுமுடீன் அவர்களும் கலந்து கொண்டதுடன், பள்ளிவாசல் நிர்வாக சபையினரும், ஜமாஅத்தினரும் திரளாக பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours