(சுமன்)



கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினை கோரளைப் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தின் பிரதான அலுவலகத்தில் வாகன தரிப்பிடத்திற்கு அண்மையில் அமைந்துள்ள களஞ்சிய அறையில் இன்றைய தினம் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வாழைச்சேனை பிரதேச சபையில் தெரிவித்தமைக்கமைவாக குறித்த பிரதேசத்திற்கு விரைந்த தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் குறித்த தீயினை மிகப் பிரயத்தனத்தின் மத்தியில் அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் ஏற்பட்ட தீ பரவியமை காரணமாக குறித்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. விடயம் அறிந்து குறித்த இடத்திற்கு பிரதேச செயலாளர் மற்றும் பொலிசார் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தீ காரணமாக அலுவலக பாவனைக்கு உதவாத ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், பிரதான அலுவலகத்திற்கோ, அலுவலக தற்பாடங்களுக்கோ, உபகரணங்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours