அபு அலா 




அரச சேவையில் 20 வருடங்கள் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.ஏ.எம்.அனீஸின் சேவைகளை வாழ்த்திப் பாராட்டி, வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (06) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.அப்துல் ஹை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வின்போது, ஓய்வுபெற்றுச் செல்லும் எம்.ஏ.எம்.அனீஸின் 20 வருடகால முன்மாதிரியான அரச சேவைகளைப் பாராட்டிப் பேசிய மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதிகாரிகளின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட அனீஸ் போன்ற ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவை மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், கடந்த 9 வருடங்களாக சுதேச மருத்துவ திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் தனது பணியினை முன்னெடுத்திருந்தார். இவர் போன்ற ஊழியர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்தி வழியனுப்புவதை கெளரவமாக நான் கருதுகிறேன் எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மாகாண ஆணையாளரால் அவருக்குப் பொன்னாடை போர்த்தி, வைத்தியசாலை சமூகத்தின் சார்பில் நினைவுச் சின்னம் மற்றும் பணப்பொதி என்பவற்றை வழங்கி கௌரவித்தார்.

ஓய்வு பெற்றுச் சென்ற அனீஸ், அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் 11 வருடங்களும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் 9 வருடங்களும் தனது சிறந்த அரச பணியினை முன்னெடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் அனீஸின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours