கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின்
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து எமது பிள்ளைகள் நாட்டில்
நற்பிரஜைகளை உருவாக்க பொருத்தமான கொள்கை வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இவரின் தலைமைத்துவத்துடன் நாடு அபிவிருத்தி அடைவதுடன் அதன் மூலம் நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் வாழ முடியும் என, பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவியுமான ஸ்ரீயாணி விஜயவிக்கிரம தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி மகளிர் பிரிவினருடனான மக்கள் சந்திப்பு, லீஸா சமுதாய மகளிர் அமைப்பின் தலைவி என்.எம்.மறினா தலைமையில் சாய்ந்தமருது காரியாலயத்தில்
அண்மையில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தொடர்ந்து
உரையாற்றுகையில்,
நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள அபிவிருத்தி குழுத் தலைவியாக என்னை நியமித்துள்ளார்கள். அதனையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். சகல இன மக்களுக்கும் சேவை செய்வதுடன் இங்குள்ள மக்கள் அனைவரும் ஒருமித்து ஒற்றுமையாகவும் சமாதானத்துடன் வாழ வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
இந்த நாட்டைப் பொறுத்தமட்டில் குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு நிறைவான உரிமைகள் கிடைக்கப்பெறுவதில்லை. இவ்விடயத்தை பாராளுமன்றம் ஊடாக நடைமுறைப்படுத்துகின்ற வேலைத்திட்டங்களில் முன்னெடுக்கவுள்ளேன். முஸ்லிம் பெண்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் காணுகின்ற உலகம் கணவன், பிள்ளைகளை பராமரிப்பது மாத்திரமே. ஆனால் இதை விட வெளியுலகத்தில் பொறுப்புள்ள வேலைத்திட்ட கடமைகளை பெண்கள் ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள். இதை விட பாராளுமன்றில் சேர்ந்து வேலை செய்யக்கூடிய பெண்களும், எங்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களில் செயலாற்றுகின்றனர்.
கலந்து கொண்ட பெண்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைத்ததுடன், இதன் போது பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வைப்பேன் என பாரளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜயவிக்கிரம உறுதியளித்தார்


Post A Comment:
0 comments so far,add yours