துதி

மக்களை குழப்பாதீர்கள், குழம்பாதீர்கள்,  குழம்பிய குட்டையில் மீன் பிடித்து இலாபமடைய எவரும் நினைக்காதீர்கள். நையாண்டி எழுத்துக்கள் , பேச்சுக்களைத் தவிர்த்து தற்போதைய நிலையில், சமூகப் பொறுப்பினை உணர்ந்து சகலரும் செயற்பட்டாக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீன நாட்டில், ஆரம்பித்த கொரோணா வைரஸின் தாக்கம் தற்போது உலகிலுள்ள சகல மக்களுக்கும் பேரச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த நிலையில், சமூகப் பொறுப்பினை உணர்ந்து சகல மக்களும் செயற்பட்டாக வேண்டும்.

இந்த நிலையில், அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கொரோணாத் தாக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது  தவிர்ப்பதற்கு இவ்வுத்தரவு தேவையானதேயாகும். எனவே மக்கள் நடமாட்டத்தினைத் தவிர்ப்பதன் மூலமாக  கொரோணாவின் பரவுகையைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது .

அதேவேளை மருத்துவர்களின் அறிக்கைகள், ஆலோசனைகளுக்குச் செவிசாய்க்க வேண்டியது அவசியமானதாகும். மேலும், பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், ஏனைய துறையினர்கள்   இவ்விடயங்களில் காட்டும் அக்கறையினை நாமும் மதித்து நடக்க வேண்டும். மாறாக நாங்கள் அசமந்தப் போக்கில் நடந்தால், நாட்டு மக்கள் நோய் அவலத்திற்குள் தள்ளப்பட்டு விடுவார்கள் .
அதேவேளை ஊரடங்கு உத்தரவு சரியானதாக இருந்தாலும், அன்றாடம் நாட்கூலிகளாக வேலை செய்யும் ஏழை மக்கள் வீட்டுக்குள் முடங்குவதால் பட்டினியை எதிர் கொள்ள வேண்டி ஏற்படும். எனவே இப்படியான மக்களை கிராம சேவை உத்தியோகத்தர்கள் மூலமாகப் பிரதேச செயலாளர்கள் அடையாளம் கண்டு அரசாங்க அதிபர்களுக்கு அறிவித்து அத்தியாவசிய உலர் உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா நோயாளிகள், தொற்றுக்குள்ளானதாகச் சந்தேகிக்கப்படுபவர்களைக் கேலி செய்கின்ற நபர்கள் மனிதாபிமானிகளாக இருக்க முடியாது. இந்த  நோய், கேலி செய்கின்றவர்களைக் கூட நாளை தாக்கவும் கூடும். பொறுப்புடன் பேசுங்கள், எழுதுங்கள், நடந்து கொள்ளுங்கள்.

கொரோணாத் தாக்கமுள்ள காலத்தில் பாராளுமன்ற தேர்தலை நடாத்த நினைத்தமை தப்பான செயலாகும். ஆனால் தேர்தலை ஒத்தி வைத்த தேர்தல் ஆணையாளரைப் பாராட்டியாக வேண்டும்.
மக்களை குழப்பாதீர்கள், குழம்பாதீர்கள்,  குழம்பிய குட்டையில் மீன் பிடித்து இலாபமடைய எவரும் நினைக்காதீர்கள். நையாண்டி எழுத்துக்கள்  நையாண்டிப் பேச்சுக்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours