துறைநீலாவணையில் இடம்பெறும் சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும், அவ்வாறான நபர்களுக்கான சட்ட நடவடிக்கையை பொலிசார் மேற்கொள்ளவேண்டும் துறைநீலாவணை பொதுமக்கள் கோரிக்கை .

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை மேட்டுவட்டை வயல் பகுதியில் விவசாயி ஒருவர் நிறுத்திவைத்திருந்த  மோட்டார் சைக்கிள்,மற்றும் துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீதியில் தரித்து வைக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி,ஆசிரியர் ஒருவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பின்பகுதி,வயலில் வேளாண்மை செய்கைக்கு நீர் பாய்ச்சிய  நீர்பம்பி உட்பட கால்நடைகள்  திருடர்களால் கொள்ளையிடப்பட்ட சம்பவங்கள் துறைநீலாவணையில் இவ்வாண்டில் இடம் பெற்றுள்ளதாக பொதுமக்கள்,விவசாயிகள் தெரிவித்தனர்

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்...

பெரியநீலாவணையிலிருந்து  துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதியின் அருகில் அமைந்திருக்கும் மேட்டுவட்டை வயல் பிரதேசத்தில்  விதைப்பு வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அவ் விவசாயி தனது மோட்டார் சைக்கிளை வீதி அருகில் நிறுத்திவைத்துவிட்டு வயலுக்குள் நீர் பாய்ச்சுவதற்கு செல்வதனை அவதானித்த திருடர்கள் மோட்டார் சைக்கிளை அபகரித்துச் சென்றுள்ளார்கள்.

இதேவேளை உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற தனிநபர் வீதியில் தனது துவிச்கக்கர வண்டியை நிறுத்திவிட்டுச் சென்றுள்ள நிலையில் துவிச்சக்கரவண்டி களவாடப்பட்டுள்ளது.வயலில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் நீர்பம்பி களவாடப்பட்டுள்ளது.அதேபோன்று ஆசிரியர் ஒருவரின் வீட்டில் வைக்கப்பட்ட மோட்டார்சைக்கிளின் பின்பகுதி திருடர்களால் திருடப்பட்டுள்ளது.இதேபோன்று கால்நடைகளும் திருடப்படுகின்றது.  இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

அதே வேளை அண்மைக்காலமாக துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதியின் அருகில் இருக்கும் குளத்தினுள் தூண்டிலில் மீன் பிடிப்பவர்கள் போன்று பாசாங்குசெய்துகொண்டு கொள்ளையிடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனால் வீதியால் பயணம் செய்யும் பெண்கள்,பாடசாலை மாணவிகள்,அரச உத்தியோகத்தர்கள் உட்பட வீதியால் பயணம் செய்யும் அனைவரும் அச்சம் அடைகின்றனர்.

இதேவேளை துறைநீலாவணையில் உள்ள வீதிகளில் அதிக நபர்களை ஏற்றிக்கொண்டு மதுபோதையில் மோட்டார்சைக்கிளை பயணிக்கும் கும்பல்கள் அதிகரித்துள்ளதாகவும்,அவ்வாறானவர்கள் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தி தப்பிச் செல்வதாகவும்,இதனால் வீதிகளில் குழந்தைகள்,பிரத்தியேக வகுப்புக்குச் செல்லும் மாணவவர்கள்,முதியோர்கள் போக்குவரத்து செய்ய முடியாத துப்பாக்கிய நிலையில் காணப்படுவதாகவும் பொதுமக்கள்,மாணவர்கள்,கவலை வெளியிடுகின்றனர்.

எனவே இவ்வாறான கீழ்தரமான சமூகவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் அவ்வாறான நபர்களுக்குரிய சட்ட நடவடிக்கையை கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மாதிபர்,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்,மாவட்ட அரசாங்க அதிபர் போன்றோர்கள் மேற்கொள்ளவேண்டும் என துறைநீலாவணை பொதுமக்கள்,விவசாயிகள்,சமூகநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours