மாற்றத்திற்காக போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேசிய எல்லை நிர்ணய குழுவினை இன்று(புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “மாற்றத்தினை கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தற்போது ஜனநாயக நீதியாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பினை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். எனவே அவர்கள் அனைவரும் ஆர்வமாக இந்த தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சிலர் நிதி இல்லை என சொல்லும் நொண்டி சாட்டுகள் தொடர்பில் கரிசனை செலுத்தாமல், அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும்.

அதேபோன்று உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மேலும் பல விடயங்கள் தொடர்பில் நாம் பேசியிருந்தோம்.

குறிப்பாக வட்டாரங்களின் எண்ணிக்கையினைக் குறைக்கும் வகையிலான சில செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கு ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் துணை போகும் வகையில் செயற்படுகின்றனர்.

எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் வட்டாரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமே ஒழிய குறைக்கப்பட்டக் கூடாது.

இந்த விடயத்தினை நாம் இன்றைய தினம் வலியுறுத்தியுள்ளோம்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours