நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து தமிழ்த் தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நெடுந்தீவு இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில் தங்கியிருந்த ஐவர் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு 12ஆம் வட்டாரம் j/06 கிராம சேவகர் பிரிவில், மாவிலி துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தினை விரைவில் களைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சி வலியுறுத்துகின்றது.
இந்த படுகொலை குழுவாகவா அல்லது தனி நபரால் மேற்கொள்ளப்பட்டதா என நீதியானதும் நியாயமானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இனிவரும் காலங்களில் வடமாகாணத்தில் எந்த ஒரு பகுதியிலும் இது போன்ற படுகொலைகள் இடம்பெறுவதை தவிர்க்கும் வகையில் கொலையுடன் தொடர்புப்பட்ட குற்றவாளிகளுக்கு எந்தவொரு பாரபட்சமும் காட்டாமல் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
நூற்றுக்கணக்கான கடற்படையினர் காணப்படும் முகாமின் முன்னால் வீட்டில் உள்ளவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்வது என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு விடயமாகும்.
நெடுந்தீவு பகுதிக்குள் நுழையும் போதே ஆள் அடையாள அட்டை பதிவு செய்தல், குறுக்கு விசாரணைகள் மேற்கொள்தல் போன்ற நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுக்கும் நிலையில் இவ்வாறான ஒரு தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டு தப்பிச்செல்வது என்பது பொது மக்கள் மத்தியில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான கொலையாளிகள் தப்பி செல்வதற்கு முடியும் எனின் மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடற்படை முகாம் என்னத்திற்காக இந்த இடத்தில் இருக்க வேண்டும்.
மக்களை பாதுகாக்கவே பாதுகாப்பு தரப்பினர் இருக்க வேண்டும் குற்றவாளிகளை காப்பாற்றும் பாதுகாப்பு துறை மக்களுக்கு அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் சாடியுள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours