இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடந்த ஒன்பது மாதங்களாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் தொடர்பில் சற்று முன்னர் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாடு நெருக்கடியில் இருந்த போது, சரியான பொருளாதார கொள்கைகளும், மக்களின் கூட்டு முயற்சிகளும் சிறப்பாக அமைந்ததனால் பொருளாதாரம் படிப்படியாக நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சிறந்த எதிர்காலத்திற்கான மறுசீரமைப்புகளை விபரிக்கும் திட்ட வரைப்படத்துடன் இலங்கை கூட்டான வளர்ச்சி மற்றும் சுபீட்சமான பயணத்திற்கு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரல் குறித்து சில குழுக்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
எனினும், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதே முக்கியமானதாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி , வாழ்க்கைச் செலவு குறைவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் வெளிப்படைத்தன்மையுடனான கலாசாரத்தை உருவாக்கவும் இந்த பொருளாதார மறுசீரமைப்புகள் வழிவகுக்கும் என குறிப்பிட்டார்.
சவாலான காலக்கட்டத்தில் நாட்டின் மீது கொண்ட பற்றினால் உந்தப்பட்ட அனைத்து இலங்கையர்களின் சகிப்புத்தன்மையையும் பாராட்டிய ஜனாதிபதி , இன்னும் சிறிது காலம் இந்தப் பாதையில் பயணிப்பதன் மூலம் சிரமங்களற்ற, பொருளாதார ரீதியில் ஸ்திரமான எதிர்காலத்தை அடைய முடியும் என குறிப்பிட்டார்.
கடுமையான நிதிக் கட்டுப்பாடு மற்றும் செலவு குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக, பணவீக்கம் குறைதல் மற்றும் பண பரிமாற்றம் அதிகரிப்பு உள்ளிட்ட சாதகமான முடிவுகளை அடைய முடிந்துள்ளதாகவும், அனைவரினதும் வாழ்க்கைச் சுமை குறைந்து, 70% வரை உயர்ந்திருந்த பணவீக்கம் இன்று 25.2% வரை குறைந்துள்ளதாகவும், அதன் பயனை தற்போது நாட்டு மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.
ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாருக்கும் நான் இடமளிக்கப் போவதில்லை.2048இல் இலங்கையை அபிவிருந்தியடைந்த நாடாக மாற்றுவதே எனது இலக்காகும் என தேசிய நிலைமாற்றத்துக்கான திட்டவரைபடத்தை நாட்டுக்கு முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

Post A Comment:
0 comments so far,add yours