!


நூருல் ஹுதா உமர்

கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக புதிதாக கடமையேற்றுள்ள லசந்த களுவராச்சி அவர்களை உத்தியோகபூர்வமாக வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபை தலைவர் எம்.ஐ. அப்துல் அஸீஸ் தலைமையில் இன்று பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.


நிகழ்வில் புதிதாக கடமையேற்ற பொலிஸ் தலைமை பொறுப்பதிகாரிக்கு பொன்னாடை போற்றி வரவேற்பு வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில், வரவிருக்கும் 204 வது கொடியேற்று விழா தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்கு, வாகன தரிப்பிட முகாமைத்துவம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. விழா காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஒழுங்குமுறைகளை சீராக முன்னெடுப்பதற்கும் பொலிஸ் துறையினரும் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் இணைந்து செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் மேற்கொண்ட ஆலோசனைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், இச்சந்திப்பு சமூக நலன், சட்ட - ஒழுங்கு பேணல், போதை ஒழிப்பு நடவடிக்கைகள் ஆகிய துறைகளில் பொலிஸ் துறையுடனும், பள்ளிவாசல் சிவில் சமூக அமைப்புகளுடனும் இணைந்து செயல்படும் எதிர்கால ஒத்துழைப்பிற்கான ஒரு முக்கிய தொடக்கமாக அமைந்தது. நகரின் அமைதி, பாதுகாப்பு மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதில் இருதரப்பினரும் உறுதியான நம்பிக்கையையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பரிசோதகர் முஹம்மத் வாஹித், போக்குவரத்து பொறுப்பதிகாரி முஹம்மத் நஜீம், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், வாகன தரிப்பிட சேவை வழங்கும் கழகப் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய சமூக அமைப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours